அமீரகத்தில் 1990 முதல் 2020 வருடங்களுக்கிடையே பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 4000 திர்ஹம்ஸ் வழங்கப்படுவதாக ஆன்லைனில் புதிய மோசடி..!! உஷார்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தொழிலாளர் அமைச்சகம் 1990 மற்றும் 2020 வருடத்திற்க்கு இடையில் அமீரகத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு 4,000 திர்ஹம்ஸ் பணம் வழங்குவதாக வாட்ஸ்அப் செய்தி ஒன்று தற்பொழுது அமீரகம் முழுவதும் பரவி வருகின்றது. இது குறித்து மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ள சம்பந்தப்பட்ட அமைச்சகம், இது ஒரு மோசடி என்றும், உங்களுக்கு இந்த செய்தி கிடைத்தால் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதே போன்று இந்தியாவிலும் அங்குள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திலிருந்து 120,000 ருபாய் வழங்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் மூலமாக பரப்பப்பட்டு வந்த செய்தியை இந்திய அரசு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் அமைச்சகம் பெயரில் பதியப்பட்டுள்ள labour.rebajaslive.com எனும் அந்த போலியான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பயனாளர்கள் தங்களின் பெயர் இருக்கிறதா என்று சரிபார்க்க அந்த லிங்கை கிளிக் செய்யுமாறு கூறுகிறது. அதிலிருந்து வலைத்தளத்திற்கு செல்லும் லிங்கானது மூன்று எளிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என தொடங்கி ஒவ்வொன்றாக நீளும் இந்த மோசடி இறுதியாக 20 நபர்களுக்கு ஷேர் செய்ய வேண்டும் என முடிகிறது. பொதுமக்கள் யாரும் இந்த மோசடி விளம்பரத்திற்கு பதிலளிக்க வேண்டாம் எனவும் இது போன்ற ஆன்லைன் மோசடிகளை விட்டும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அமீரக காவல்துறை சார்பாக ஏற்கனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.