அமீரக செய்திகள்

வாகனத்தில் தனி நபராக பயணம் செய்பவர் முகக்கவசம் அணிய தேவையில்லை..!! துபாய் காவல்துறை இயக்குனர் தகவல்..!!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வாகனங்களில் பயணம் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று துபாய் காவல்துறையின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, வாகனத்தில் ஒன்று அல்லது இரண்டு நபர்களுடன் சேர்ந்தோ அல்லது தனியாகவோ பயணம் செய்தாலும் முக கவசம் அவசியம் என்றும், அதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், வாகனத்தில் தனி நபராக பயணம் செய்யும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றும், எனினும் இரண்டு அல்லது மூன்று நபர்களாக பயணம் செய்யும் பட்சத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் துபாய் காவல்துறையின் போக்குவரத்துத் துறை இயக்குநர் (Director of Traffic Department at Dubai Police) பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் (Brigadier Saif Muhair Al Mazroui) அவர்கள் கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் கூறியதாவது, “வாகன ஓட்டி காரில் தனியாக பயணம் செய்யும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. எனினும் கொரோனா தொற்றிற்கான எந்த ஒரு அறிகுறிகள் தென்படாவிட்டாலும் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஃபரிதா அல் ஹொசானி வலியுறுத்தியுள்ளார்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“வாகனங்களுக்குள் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து நாங்கள் முன்பு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மற்ற பயணிகளுடன் வாகனம் ஓட்டும் போது முகக்கவசம் அணியாத ஓட்டுநர்களுக்கு துபாய் காவல்துறை ‘எச்சரிக்கை அபராதம்’ விதித்தது” என்று பிரிக் அல் மஸ்ரூய் மேலும் கூறியுள்ளார்.

ஒரு எச்சரிக்கை அபராதம் என்பது விதியை மீறுபவருக்கு அபராதம் விதிப்பதற்கு முந்தைய எச்சரிக்கையாகும். எச்சரிக்கை விடுக்கப்பட்ட நபர் மீண்டும் அந்த தவறை செய்யும் பட்சத்தில், அவருக்கு 1000 திரகம்ஸ் அபராதமாக விதிக்கப்படும் என்றும் காவல்துறை வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து, அதாவது கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 16 வரையிலான இடைப்பட்ட காலங்களில் மட்டும் முக கவசம் அணியாமல் பயணம் செய்ததற்கு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற தவறியதற்காக மொத்தம் 10,286 அபாரதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Source: Gulf News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!