அமீரக செய்திகள்

UAE :இந்தியாவிலிருந்து அடுத்த கட்டமாக 172 உறுப்பினர்கள் கொண்ட மருத்துவ குழு இன்று வருகை..!!

கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட துபாய் சுகாதார ஆணையம் மேற்கொள்ளும் முயற்சிகளை வலுப்படுத்தும் விதமாக, புதுதில்லியில் இருக்கும் இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதரகம், அடுத்த கட்டமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 172 நபர்களை கொண்ட மருத்துவ குழுவை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து வருவதற்கு தேவையான ஒப்புதல்களைப் பெற இந்திய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த மருத்துவ குழு இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு புறப்படுவதற்கான அனைத்து நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்திற்கு வரும் மருத்துவ குழு உறுப்பினர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்ட பின்னரே மருத்துவ பணிக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்பதும் குரிசிப்பிடத்தக்கது.

துபாய் சுகாதார ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஹுமைட் அல் குத்தாமி “இந்த முயற்சி இரு நாடுகளும் பகிர்ந்து கொண்ட உறவுக்கு சான்றாகும். சமூகத்திற்கு சேவை செய்ய அயராது முன்னின்று உழைக்கும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் நாங்கள் ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்று முன்னர் கூறியிருந்தார்.

இதற்கு முன்னதாக, இந்தியாவில் இருந்து கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஆஸ்டர் டி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனைகளில் பணிபுரிந்த ஊழியர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 88 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு கடந்த மே 10 ஆம் தேதி அன்று துபாய் வந்தடைந்தது. அதனை தொடர்ந்து அமீரகத்தில் இயங்கும் VPS ஹெல்த்கேர் நிறுவனம் சார்பாகவும் இந்தியாவிலிருந்து 100 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் அழைத்து வரப்பட்டு தற்போது அமீரகத்தின் பல பகுதிகளில் இருக்கக்கூடிய மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!