அபுதாபிக்குள் நுழைவதற்கு உண்டான தடை தொடர்ந்து நீடிக்கும்..!! இயக்க அனுமதியின்றி அபுதாபியை விட்டு எங்கும் செல்லலாம் என அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கையாக அமீரகம் முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த தேசிய சுத்திகரிப்பு திட்டமானது தற்பொழுது நிறைவு பெற்றுள்ளதாக அமீரக அரசு செய்தி வெளியிட்டிருந்தது. இதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் சுத்திகரிப்பு நடைபெற்று வந்த நேரங்களில் விதிக்கப்பட்டிருந்த இயக்கத்தடையானது விலக்கப்பட்டு பொதுமக்கள் எந்த நேரத்திலும் வெளியே செல்லலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமீரக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அபுதாபி அரசும் அபுதாபியில் தற்பொழுது அமலில் இருக்கும் இயக்கத்தடை குறித்து விளக்கமளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, தேசிய சுத்திகரிப்பு திட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து அபுதாபியில் வசிக்கும் மக்கள் எந்த நேரத்திலும் அபுதாபிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு செல்லாம் என்று அறிவித்துள்ளது. அதே போல், அபுதாபியில் இருந்து துபாய், ஷார்ஜா போன்ற அமீரகத்தின் மற்ற பகுதிகளுக்கு இயக்க அனுமதியின்றி வெளியே செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு வருவதற்கு உண்டான தடை நீடிக்கும் என்றும் ஏற்கெனவே அறிவித்திருந்த சில குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டும் இந்த தடையில் இருந்து தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 2 செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த இந்த இயக்க தடையானது அபுதாபியின் அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை குழு, அபுதாபி காவல்துறை மற்றும் அபுதாபி சுகாதார துறை ஒன்றிணைந்து கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியாக அபுதாபியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரிய அளவிலான தேசிய பரிசோதனை திட்டத்தை ஆதரிக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.