UAE: திறந்த வெளியில் பணிபுரிபவர்களுக்கான மதிய இடைவேளை நாளை முதல் தொடக்கம்..!! அமைச்சகம் அறிவிப்பு..!!
வளைகுடா நாடுகளை பொறுத்தவரை கோடைகாலங்களில் ஏற்படும் அதிக வெப்பத்தின் காரணமாக மதிய வேளைகளில் நேரடியாக சூரிய ஒளி படுமாறு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மதிய நேர இடைவேளை கொடுப்பது வழமையாக நடக்கும் நிகழ்வாகும். இந்த ஆண்டிற்கான கோடைகாலம் ஆரம்பிப்பதை முன்னிட்டு வெயிலின் தாக்கம் தற்பொழுது அதிகமாகவே இருக்கின்றது. எனவே, இந்த வருடத்திற்கான கோடைகாலத்தை முன்னிட்டு மற்ற வளைகுடா நாடுகளில் வழங்கப்பட்டு வரும் மதிய நேர ஓய்வு இடைவேளையானது ஐக்கிய அரபு அமீரகத்திலும் வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம், (MoHRE), நேரடியாக சூரியனுக்குக் கீழும், திறந்தவெளிகளிலும் செய்யப்படும் வேலைகளை ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரையிலான மூன்று மாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், இந்த மூன்று மாத காலத்திற்கும் மதியம் 12:30 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரையிலான நேரங்களில் திறந்தவெளிகளில் வேலை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தால் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படும் இந்த முடிவின் படி, ஒரு தொழிலாளி மதியம் 12:30 மணியிலிருந்து மாலை 3:00 மணி வரையிலான நேரங்களில் வேலை செய்யக் கூடாது என்றும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளிகளுக்கு இந்த இடைப்பட்ட நேரங்களில் ஓய்வெடுக்க ஒரு நிழல் இடத்தை வழங்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த முடிவின் கீழ், தினசரி வேலை நேரம், காலை, மாலை அல்லது இரண்டு ஷிப்டுகளுக்கும் சேர்த்து என எட்டு மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் ஒரு தொழிலாளி ஒரு நாளில் எட்டு மணிநேரத்தை தாண்டியும் வேலை செய்தால், தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மத்திய சட்டத்தின் விதிகளின்படி, எட்டு மணி நேரங்களுக்கு மேலாக அவர் பார்க்கும் வேலை நேரமானது கூடுதல் நேரமாகக் கருதப்பட்டு அதற்காக தொழிலாளிக்கு தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில்நுட்ப காரணங்களுக்காக தொடர வேண்டிய வேலைகளுக்கு அதற்குரிய நிறுவனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் கான்கிரீட் போடுவது, நீர் குழாய்கள், பெட்ரோல் குழாய்கள், கழிவுநீர் குழாய்கள் அல்லது மின் இணைப்புகள் துண்டிக்கப்படுதல் போன்ற தொழில்நுட்ப காரணங்களுக்காக ஒத்திவைக்க முடியாத திட்டங்களில் தொழிலாளர்கள் பணிபுரிந்தால் தடைசெய்யப்பட்ட நேரங்களில் தொடர்ந்து பணியாற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களின் எண்ணிக்கையின்படி, பொது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தின் தேவைகளுக்கு ஏற்ப குளிர்ச்சியான குடிநீரை வழங்க வேண்டும், அத்துடன் தாகம் தணிக்கும் பொருட்களையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மேலும், பணியிடங்களில் முதலுதவி பெட்டியுடன் சேர்த்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகம் அறிவித்துள்ள இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத எந்தவொரு நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வேலையை தொடரும் நிறுவனத்திற்கு ஒரு தொழிலாளிக்கு AED 5,000 என அபராதம் விதிக்கப்படும் என்றும் மேலும் தடையின் போது பல தொழிலாளர்கள் பணிபுரிந்தால் அதிகபட்சம் AED 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விதிகளை மீறி பணிபுரியும் நிறுவனத்தினை புகாரளிக்க நான்கு வெவ்வேறு மொழிகளில் 24 மணி நேரமும் கிடைக்கும் கட்டணமில்லா எண்ணான 80060 ஐ தொடர்புகொண்டு தங்கள் புகாரினை தெரிவிக்கலாம் என்றும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.