கிரீன் லிஸ்ட் பட்டியலை நீக்கிய அபுதாபி.. PCR டெஸ்ட், தனிமைப்படுத்தல் இனி தேவையில்லை…!! முழுவிபரங்கள் உள்ளே..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பால் அமீரக அரசானது கொரோனாவிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பெருமளவில் தளர்த்தியுள்ளது. அத்துடன் ஒவ்வொரு எமிரேட்டும் தங்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை ஒவ்வொரு எமிரேட்டும் அறிவித்து வருகின்றது. அதில் அபுதாபி அரசும் கொரோனாவிற்கான கட்டும்பாடுகளை தளர்த்தி புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி அபுதாபி விமான நிலையத்திற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறையும் நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அபுதாபி கொரோனா நோய்க்கான ஆபத்து குறைவாகக் கருதப்படும் நாடுகளின் பட்டியலை (கிரீன் லிஸ்ட்) அவ்வப்போது புதுப்பிக்கும்.
‘கிரீன் லிஸ்ட்’ கீழ் உள்ள நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அபுதாபிக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகளில் சில சில தளர்வுகள் வழங்கப்படும்.
கிரீன் லிஸ்டில் இல்லாத நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அபுதாபி வந்தவுடன் கூடுதல் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் தற்பொழுது கிரீன் லிஸ்ட் நாடுகளின் பட்டியலை நீக்கி விட்டு அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது பிப்ரவரி 26 (இன்று) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் அபுதாபி வரும் அனைத்து பயணிகளுக்கும் PCR சோதனை, தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக கவசம்
வெளிப்புற இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை. நீங்கள் விருப்பப்பட்டால் போட்டுக்கொள்ளலாம். இருப்பினும் உட்புற இடங்களில் முகமூடிகளை அணிவது இன்னும் தேவைப்படுகிறது, முக கவசங்களை அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் கட்டாயமாகும். மேலும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நுழைவுக்கு EDE ஸ்கேனர் மற்றும் கிரீன் பாஸ் நடைமுறை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல்
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலின் போது கைப்பட்டைகளை அணியத் தேவையில்லை. அதே போல் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட விதி நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தினசரி PCR சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இயக்க திறன் அதிகரிப்பு
சுற்றுலா தலங்கள் மற்றும் வணிக வளாகங்களில், இயக்க திறனை 90 சதவீதமாக உயர்த்த குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அபுதாபி எமிரேட்டில் நடைபெறும் நிகழ்வுகளில், இயக்க திறனை 90 சதவீதமாக அதிகரிக்க குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மூடிய இடங்களுக்குள் நுழைவதற்கான PCR சோதனைகள், கிரீன் பாஸ் உடன் உடல் ரீதியான சமூக தூரத்தை இன்னும் கடைபிடிக்க வேண்டும்.
அல் ஹோஸ்ன் கிரீன் பாஸ்
அபுதாபி அரசு அலுவலகங்களுக்குள் நுழைய அனைத்து தொழிலாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கிரீன் பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
தடுப்பூசி போடாத தொழிலாளர்களில் தடுப்பூசி போடுவதற்கு விலக்கு பெற்றவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.