அமீரக செய்திகள்

அமீரகத்தில் வசித்த தமிழரின் 750,000 திர்ஹம் ஓவர்ஸ்டே அபராதம் தள்ளுபடி..!! 20 வருடங்களுக்கு பிறகு தாயகம் திரும்ப ஏற்பாடு..!!!

இந்தியாவிலிருந்து பல கனவுகளுடன் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு புதிய வேலை விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த தமிழகத்தை சேர்ந்த ஒருவர், இதுநாள் வரையிலும் இந்தியா திரும்பாமலேயே தனது வாழ்நாளில் 20 வருடங்களை குடும்பத்தை பிரிந்து அமீரகத்திலேயே கழித்து வந்துள்ளார். தற்பொழுது அவருக்கு அமீரக அரசு விதித்திருந்த 750,000 திர்ஹம் ஓவர்ஸ்டே அபராதமானது தள்ளுபடி செய்யப்பட்டு அவர் விரைவில் தமிழகம் திரும்பவுள்ளார். இது குறித்த செய்தியை ஏற்கெனவே நாங்கள் பதிவிட்டிருந்தோம்..

20 வருடங்களாக தாயகம் செல்ல முடியாமல் அமீரகத்தில் தவித்த தமிழர்..!! நாடு திரும்ப உதவிக்கரம் நீட்டிய தன்னார்வலர் குழு..!!

தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் என்பவர் தனது 36 ஆவது வயதில் கடந்த 2000-ம் ஆண்டு ஏஜென்ட்டிடம் ரூ .120,000 (6,048 திர்ஹம்) செலுத்திய பின்னர் ஏஜென்ட் மூலமாக புதிய வேலை விசா பெற்று அமீரகம் வந்துள்ளார்.

அவருக்கு வேலை வாங்கி தருவதாகக்கூறி விசாவில் அமீரகத்திற்கு அழைத்து வந்த ஏஜென்ட், விசா அடிப்பதற்கு முன்பாகவே அவரின் பாஸ்ப்போர்ட்டை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். பலமுறை அவரை தொடர்புகொள்ள முயன்றும் பயனளிக்காததால் கையில் பாஸ்போர்ட் இல்லாமலும், விசா அடிக்க இயலாமலும், இந்தியாவிற்கு திரும்ப முடியாமலும் தவித்த மதியழகன் அன்று முதல் இன்று வரையிலும் அதே தவிப்பில் இந்தியா செல்வதற்கான நாட்களை எண்ணிக்கொண்டும், அதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்கியும் தனது காலத்தை கடத்தி வந்துள்ளார்.

அவரின் பாஸ்ப்போர்ட்டில் இருக்கும் தந்தை பெயரானது இந்தியாவில் இருக்கும் மற்ற ஆவணங்களில் இருந்து வேறுபட்டு இருப்பதால் அவரால் கடந்த 20 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி வந்த பொது மன்னிப்பு திட்டத்தின் மூலம் பயன் பெற முடியவில்லை என்று சமீபத்தில் அமீரகத்தில் இருக்கும் ஏ.கே.மகாதேவன் மற்றும் சந்திர பிரகாஷ் ஆகிய இரு சமூக சேவையாளர்களிடம் தாயகம் திரும்ப உதவி கேட்டு அவர்களின் மூலம் மதியழகன் தாயகம் திரும்புவதற்கான கோரிக்கையினை சமர்ப்பித்த போதுதான் தெரிய வந்துள்ளது.

ஏஜென்ட்டை பலமுறை அவரை தொடர்புகொள்ள முயன்றும் பயனளிக்காததால் கையில் பாஸ்போர்ட் இல்லாமலும், விசா அடிக்க இயலாமலும், இந்தியாவிற்கு திரும்ப முடியாமலும் தவித்த மதியழகன் பின்னர் ஷார்ஜாவில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனால் மதியழகன் அமீரகத்தில் சட்ட விரோதமாக 20 வருடங்களாக தங்கி வந்துள்ளார். மேலும், பல்வேறு நிறுவனங்களில் தனது குடும்பத்திற்காக பகுதிநேர வேலை செய்து வந்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட முந்தைய விசா பொது மன்னிப்பு சலுகைகளின் போது வீடு திரும்ப முயற்சித்ததாகவும், தனக்கு உதவி செய்வதாக உறுதியளித்த நபர்களிடம் 10,000 திர்ஹமிற்கும் அதிகமான தொகையை இழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பின்னர், ஏ.கே.மகாதேவன் மற்றும் சந்திர பிரகாஷ் ஆகியோரின் முயற்சியால் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் அவசர சான்றிதழ் பெற உதவிய போதுதான் இந்தியாவில் இருந்து அடையாள அனுமதி கிடைக்கவில்லை என்றும் அதன் பின்னர்தான் அதற்கான காரணத்தை கண்டுபிடித்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அவர்கள் இருவரும் இந்த தவறை சரிசெய்து அவரது ஆவணங்களை செயலாக்க இந்திய தூதரகம் மற்றும் மதியழகன் கிராமத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளை அணுகியதாகவும் கூறினர். அதனை தொடர்ந்து அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதர் பவன் கபூர் அவர்கள் கவனத்திற்கு இது கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மகாதேவன் அவர்கள் இது குறித்து கூறும் போது, மதியழகன் அவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் இருப்பதாகவும், 19 வயது நிரம்பிய இளைய மகளை அவர் இதுவரையிலும் நேரில் பார்த்ததில்லை என தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் விசா இல்லாத காரணத்தினால் அவரின் மூத்த மகளின் திருமணத்திற்கு செல்ல முடியாமல் போனதை எண்ணி அவர் மனம் வருந்தியதாகவும், இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது தனது குடும்பத்துடன் அவர் மீண்டும் இணைய இருப்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறினார்.

மேலும் மஹாதேவன் அவர்கள் கூறுகையில், “மதியழகன் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு சென்று இதுவரை பார்த்திராத தனது இளைய மகளை விரைவில் சந்திப்பார் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “மதியழகனிடம் ஸ்மார்ட் போன் இல்லை, அவர் ஒருபோதும் குடும்பத்திடன் வீடியோ கால் மூலம் பேசியதில்லை. எனது தொலைபேசியிலிருந்தே அவர் தனது இளைய மகளை முதல் முறையாகப் பார்த்தார். அது ஒரு உணர்ச்சிகரமான தருணம். அவர்கள் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாலும், தந்தை மற்றும் மகள் இருவரும் முதல்முறையாக ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்தபோது கண்ணீர் விட்டார்கள்” என்று தெரிவித்தார்.

விரைவில் தன் குடும்பத்துடன் இணையவிருக்கும் மதியழகன் வீடு திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட இரு சமூக ஆர்வலர்களுக்கும், உதவிய அதிகாரிகளுக்கும் இவ்வளவு பெரிய அபராதத்தை தள்ளுபடி செய்த ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்திற்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!