UAE: கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் (Dose) பெற்ற சுகாதார அமைச்சர்..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முகமது அல் ஓவைஸ் அவர்கள், அமீரகத்தில் பரிசோதிக்கப்பட்டு வரும் கொரோனாவிற்கான தடுப்பூசியின் முதல் டோஸைப் (Dose) பெற்றுள்ளார். கடந்த வாரம், அமீரகத்தில் கொரோனாவிற்கான தடுப்பூசிகளை முன்னணி சுகாதார ஊழியர்களில் வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான அதிக ஆபத்து இருக்கும் ஊழியர்களுக்கு வழங்குவதற்கான அறிவிப்பை தொடர்ந்து அத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓவைஸ் அவர்கள் கூறுகையில், கொரோனா பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நாட்டின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்றும் விதிமுறைகள் மற்றும் சட்டங்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறது என்றும் இதன் மூலம் உரிம நடைமுறைகளை விரைவாக மதிப்பாய்வு செய்யலாம் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
“தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளன, மேலும் தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது மற்றும் கொரோனா தொற்றுநோய் பாதிப்பால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க பங்களிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், கொரோனாவிற்கான தடுப்பூசியை அவசர கால கட்டத்தில் பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்தது. தற்போது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ள இந்த தடுப்பூசி, இதுவரை நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியதனை தொடர்ந்து கடந்த வாரம், ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸிற்கான தேசிய மருத்துவக் குழுவின் தலைவரும், COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் முதன்மை ஆய்வாளரான டாக்டர் நவல் அல்-காபி இது குறித்து விரிவாக பேசுகையில், “ஆறு வார காலப்பகுதியில் 125 நாடுகளைச் சேர்ந்த 31,000 பேர் தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்றனர், அதேபோன்று நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 1,000 தன்னார்வலர்களுக்கும் இந்த தடுப்பூசி வெற்றிகரமாக முயற்சிக்கப்பட்டது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தெரிவிக்கையில் “தடுப்பூசி கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப முடிவுகள் ஊக்கமளிக்கின்றன, இருப்பினும் தடுப்பூசி குறித்த ஆய்வுகள் தொடரும். தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர்களுக்கு பிற தடுப்பூசிகளைப் போலவே லேசான பக்க விளைவுகள் எதிர்பார்த்தபடி வருகின்றன. எனினும் பெரிய ஆபத்தான பக்க விளைவுகள் அல்லது ஏதேனும் அறிகுறிகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என்று அல் காபி தெரிவித்திருந்தார். அத்துடன் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 1,000 தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டது, அவர்களுக்கும் எந்த சிக்கல்களும் இதுவரையிலும் ஏற்படவில்லை என்றும் அல் காபி அவர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.