துபாய்: ஒரு வாரத்திற்கு கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ள குளோபல் வில்லேஜ்..!! அறிவிப்பு வெளியீடு..!!
துபாயின் பிரபலமான பன்முகக் கலாச்சார இலக்கான குளோபல் வில்லேஜின் சீசன்28 மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படும் என்று அதன் நிர்வாகம் வியாழக்கிழமையன்று அறிவித்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் 28ஆம் தேதியுடன் குளோபல் வில்லேஜ் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது மே 5 வரை குளோபல் வில்லேஜ் பார்வையாளர்களை வரவேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, குளோபல் வில்லேஜ் சீசன் 28 ஆனது வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாகவே அதாவது, அக்டோபர் 25 க்கு பதிலாக அக்டோபர் 18 அன்று திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து குளோபல் வில்லேஜ், கோடைகாலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்கும் தருவாயில் அடுத்த சீசனுக்காக பார்வையாளர்களை வரவேற்க திறக்கப்படும் என்றும் அதன்படி, அடுத்த அக்டோபரில் அடுத்த சீசனில் குளோபல் வில்லேஜ் அடியெடுத்து வைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய சீசனில், குளோபல் வில்லேஜில் ‘Value’ மற்றும் ‘Any Day’ என இரண்டு வகையான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ‘வேல்யூ’ வகை டிக்கெட் ஞாயிறு முதல் வியாழன் வரை செல்லுபடியாகும் மற்றும் ‘எனி டே’ டிக்கெட்டுகள் மூலம் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் எந்த நாளிலும் பார்வையிடலாம்.
ஒரு ‘வேல்யூ’ வகை டிக்கெட்டின் விலை 22.50 திர்ஹம்ஸ் மற்றும் ‘எனி டே’ டிக்கெட் ஒன்றின் விலை 27 திர்ஹம்ஸ் ஆகும். பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ள ‘கிட்ஸ் கோ ஃப்ரீ’ பிரச்சாரத்தின் மூலம் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவச நுழைவைப் பெறுவார்கள்.
பொதுவாக, குளோபல் வில்லேஜ் பூங்காவில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவச அணுகலைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel