UAE: போக்குவரத்து அபராதத்தில் 50% தள்ளுபடியை அறிவித்த மற்றொரு எமிரேட்..!!
அஜ்மானில் போக்குவரத்து அபராதத்தில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஷார்ஜாவிலும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை பறிமுதல் செய்தல் மற்றும் போக்குவரத்து புள்ளிகளையும் ரத்து செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 21, 2021 முதல் ஜனவரி 31, 2022 வரையிலான 50 நாட்களுக்கு வாகன ஓட்டிகள் இந்த தள்ளுபடியைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது என்றும் ஷார்ஜா எக்சிகியூட்டிவ் கவுன்சில் வழங்கிய முடிவின்படி, நவம்பர் 21 க்கு முன் பதிவு செய்யப்பட்ட விதிமீறல்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டள்ளது.
இருப்பினும் இது கடுமையான போக்குவரத்து குற்றங்களை உள்ளடக்காது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை அமல்படுத்த தயாராக உள்ளதாக ஷார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது.
அஜ்மானில் உள்ள அதிகாரிகள் நவம்பர் 14 ஆம் தேதிக்கு முன் பதிவு செய்த அபராதத் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளனர். நவம்பர் 21 முதல் டிசம்பர் 31 வரை வாகன ஓட்டிகள் இந்த தள்ளுபடியைப் பெறலாம் என அஜ்மான் காவல்துறை அறிவித்திருந்தது.
ஐக்கிய அரபு அமீரகம் ஏழு எமிரேட்டுகள் ஒன்றிணைந்து ஒரே நாடாக உருவாகிய 50 வது ஆண்டினை டிசம்பர் 2 ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடுகிறது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.