எக்ஸ்போ: இரு ஆண்டுகளுக்கு பின் நேரடி இசை கச்சேரியை நிகழ்த்தவுள்ள AR ரஹ்மான்… முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை…!!
ஆஸ்கார் நாயகன் AR ரஹ்மான் துபாயில் இருக்கும் எக்ஸ்போ 2020 இன் ஜூப்ளி பார்க்கில் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
நாளை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்ச்சி, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக AR ரஹ்மான் நேரிடையாக நடத்தும் முதல் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சியில் பாடகர் ஹரிஹரன், இசை இயக்குனர் ரஞ்சித் பரோட், பிரபல பின்னணி பாடகர்களான ஆண்ட்ரியா ஜெரேமியா, பென்னி தயால், ஜோனிதா காந்தி, ஹரிசரண், ஜாவித் அலி, ஸ்வேதா மோகன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் மற்றும் ராப்பர்கள் பிளேஸ் மற்றும் ஷிவாங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த இசை கச்சேரியில் மக்களால் மிகவும் விரும்பப்பட்ட ரஹ்மானின் ஹிந்தி, தமிழ் மற்றும் மலையாள பாடல்கள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
ரஹ்மான் இது பற்றி கூறுகையில், “இந்த எக்ஸ்போ 2020 நிகழ்ச்சிக்கு எனது விருப்பமான சில பாடகர்கள் மற்றும் கலைஞர்களுடன் எனது மூன்று தசாப்த கால இசையை இசைக்க மீண்டும் வருவதை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
எக்ஸ்போ டிக்கெட் வைத்திருப்பவர்கள் கச்சேரியில் கலந்து கொள்ள விரும்பினால் முன்னதாகவே வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மைதானத்தில் குறைந்த திறனிலேயே அனுமதிக்கப்படுவதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அணுகல் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எக்ஸ்போ டிக்கெட்டுகளை ஆன்லைனில் www.expo2020.com இல் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.