ஓமான்: பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக 4 பேர் பலி..!! 49 பேர் படுகாயம்..!!
ஓமானில் 53 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், 49 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து ராயல் ஓமான் போலீஸ் கூறுகையில், அகபா கந்தாபிலிருந்து (Aqaba Qantab) அல் புஸ்தான்-வாடி அல் கபீர் (Al Bustan-Wadi Al Kabir) சாலைக்கு செல்லும் பாதையில் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அதேசமயம், விபத்து ஏற்பட்ட பகுதியை சுத்தம் செய்யும் பணிகள் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களைக் கண்டறிய தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு ராயல் ஓமான் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.