துபாய்: விசா வழங்க தாமதித்ததால் ஒர்க் ஷாப்பை தீ வைத்து கொளுத்திய ஊழியர்.. 12.5 மில்லியன் திர்ஹம்ஸ் நஷ்டம்..!!
துபாயில் உள்ள ஒர்க் ஷாப்பினை 32 வயதான ஆசிய ஊழியர் ஒருவர் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. செய்தியின்படி, ஓர்க் ஷாப்பின் உரிமையாளர், ஊழியரின் வேலை விசாவினை ( work visa) வழங்குவதற்கு தாமதம் செய்ததால் அவர் வேலைசெய்யும் இடத்திற்கு தீ வைத்துள்ளார்.
தீ வேகமாக பரவியதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 9 வாகனங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது. அத்துடன் ஒர்க் ஷாப்பில் இருந்த கருவிகள் மற்றும் உபகரணங்களும் தீயில் நாசமாகியுள்ளன. எனவே, மொத்தமாக உரிமையாளருக்கு 300,000 திர்ஹம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், அருகிலிருந்த தொழிற்சாலைக்கும் தீ பரவி சுமார் 12.2 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான பொருள்களை சேதப்படுத்தியுள்ளது. ஆகையால், அந்த நபருக்கு ஒருவருடம் சிறைத்தண்டனையும் அவர் ஏற்படுத்திய சேதத்திற்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உரிமையாளரால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். உரிமையாளர் அளித்துள்ள புகாரின்படி, அவரது குடியிருப்பு மற்றும் பணி அனுமதி நடைமுறையை விரைவில் செயல்படுத்தித் தராவிட்டால் அந்த இடத்திற்கு தீ வைப்பேன் என்று மிரட்டியுள்ளார்.
உரிமையாளரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்கள் மீது எரிபொருளை தெளித்து தீ வைத்து விட்டு, பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதன்பிறகு புகாரின் அடிப்படையில் ஊழியர் காவல்துறையின் விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.