UAE: ரெட் சிக்னலை கடக்கும் வாகன ஓட்டிகள்.. எச்சரிக்கை விடுத்த ராஸ் அல் கைமா போலீஸ்..!!
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடந்த புதன்கிழமையன்று ராஸ் அல் கைமா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது, வாகனத்தை நிறுத்தாமல் தாண்டிச் செல்லும் ஓட்டுநர்கள் மற்ற திசைகளில் இருந்து வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது என்றும், இதனால் காயங்கள் மற்றும் இறப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற, விதிமீறல்களைச் செய்யும் பொறுப்பற்ற ஓட்டுநர்கள் தங்கள் உயிருக்கு மட்டுமல்லாமல், பிறரது உயிருக்கும் ஆபத்தை விளைவிப்பதாக ஃபெடரல் டிராஃபிக் கவுன்சிலின் போக்குவரத்து விழிப்புணர்வுக் குழுவின் தலைவரும், போக்குவரத்து மற்றும் ரோந்து துறையின் இயக்குநருமான பிரிக்-ஜெனரல் அகமது சயீத் அல் நக்பி அவர்கள் கூறியுள்ளார்.
ஃபெடரல் டிராஃபிக் சட்டத்தின்படி, சாலைகளில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நடத்தைக்கு 1,000 திர்ஹம் அபராதமும், 12 போக்குவரத்து புள்ளிகளும் (black points) மற்றும் 30-நாள் வாகனத்தை பறிமுதல் செய்யப்படும் என்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன் வாகன ஓட்டிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை போக்குவரத்து ஆணையத்திடம் இருந்து மீட்க 3,000 திர்ஹம்கள் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே, சாலைகளில் செல்லும்போது, சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வாகனம் ஓட்டும்போது எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜெனரல் அல் நக்பி தெரிவித்துள்ளார்.