வாடிக்கையாளர்கள் தங்கள் காரை தாங்களாகவே சோதனை செய்ய அனுமதி..!! அஜ்மானில் போக்குவரத்து ஆணையம் தொடங்கிய புதிய வாகன சோதனை சேவை..!!
அஜ்மானில் போக்குவரத்து ஆணையத்தால் புதிய வாகன சோதனை சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வாகன ஓட்டிகள் சோதனை மையத்தில் ஊழியர்களின் உதவியின்றி அவர்களது கார்களை அவர்களாகவே சோதனை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விரைவு வாகன சோதனை மற்றும் பதிவு மையத்தால் (Speed Vehicle Testing & Registration Centre) அறிமுகப்படுத்தப்பட்ட ‘Pass and Go’ சேவையானது, வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தை ஆய்வு செய்ய அனுமதிப்பதோடு கட்டணம் செலுத்துதல் மற்றும் ஆய்வுச் சான்றிதழைப் பெறுதல் போன்ற செயல்முறைகளை சேவை அதிகாரி இல்லாமல் முடிப்பதற்கும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், இந்த புதிய சேவையானது பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உயர்தர சேவைகளை மேம்படுத்தி வழங்குவதற்கும், வணிகத் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும் போக்குவரத்து ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் ஒரு பகுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அஜ்மான் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குனர் ஜெனரல் உமர் முகம்மது லூட்ட அவர்கள் கூறுகையில், ஸ்பீட் சென்டர் சேவைகளை மேம்படுத்தவும், சேவைகளின் செயல்திறனை மேம்படுத்த டிஜிட்டல் நிலைக்கு உயர்த்தவும் ஆணையம் ஆர்வமாக உள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி, புதிய சேவையில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், வாகன சோதனைச் செயல்பாட்டின் போது வாடிக்கையாளர்கள் காரை ஓட்ட அனுமதிப்பதுடன் ஆய்வு நடைமுறைகள் முடிந்ததும், பணம் செலுத்துவதற்கு காத்திருக்காமல் சோதனைப் பாதையிலிருந்து வெளியேறலாம் என்று அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, வாடிக்கையாளர்கள் சோதனை முடிந்ததைக் குறிக்கும் SMS மற்றும் உரிய பணத்தை ஆன்லைனில் செலுத்துவதற்கான லிங்க்குகளுடன் பணம் செலுத்தியவுடன் மின்னணு சான்றிதழ் போன்றவற்றைப் பெறுவர் என்று லூட்டா தெரிவித்துள்ளார்.
அத்துடன் சேவை ஊழியர் மூலம் கட்டணத்தைச் செலுத்தும் தேர்வும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அதிகாரி ஆய்வுச் சான்றிதழை வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.