சவூதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி.. 21 பேர் காயம்..!!
சவூதி அரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 21 பேர் காயமடைந்த நிலையில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
வெளியான தகவல்களின்படி, கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 23 அரபு நாட்டினரை ஏற்றிச் சென்ற பேருந்து, அல் தைஃப் அருகே உள்ள துருபா கவர்னரேட்டில் கவிழ்ந்திருக்கின்றது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்ததுடன் 21 பேர் மிதமான காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மற்ற 14 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் உள்ளூர் மருத்துவமனைகளில் கொண்டு சேர்க்கப்பட்டதாகவும் அத்துடன் ஒரு நபர் விமானம் மூலம் தைஃபில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த சம்பவம் நடந்ததை அறிந்த தைஃபில் உள்ள சுகாதார அதிகாரிகள் ஏழு ஆம்புலன்ஸ் குழுக்களை விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பியதாகவும் அறிக்கை தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவசர நிலையைக் கையாள இப்பகுதியில் உள்ள மற்ற மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டதுடன் தேவையான சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில், கடலோர நகரமான அல் குன்ஃபுதாவுக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் ஏழு பேரையும் ஏற்றிச் சென்ற கார் மீது எதிரே வந்த டிரக் வேகமாக மோதியதில் அவர்கள் அனைவரும் பலியாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வதால் சமீபத்திய வருடங்களில், சாலை விபத்துகளைக் குறைக்கும் விதமாக போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான அபராதங்களை சவூதி அதிகாரிகள் கடுமையாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.