வாடிக்கையாளர்களுக்கு 8,000 திர்ஹம்ஸ் ரமலான் பரிசு வழங்கும் எமிரேட்ஸ் நிறுவனம்? ஆன்லைன் ப்ரோமோஷன் குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை..!!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் பரிசுகளை அளிக்க ஆன்லைன் ப்ரோமோஷன்களை அவ்வப்போது நடத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, சில மோசடி கும்பல்கள் போலி வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை உருவாக்குவதுடன் ப்ரோமோஷன் உண்மையானது என்று மக்களை நம்ப வைக்க, உண்மையான விமான நிறுவனங்களின் லோகோக்களை பயண்படுத்த, அந்த லோகோவுடன் வினாடி வினா போட்டிகளை நடத்துவது தெரிய வந்துள்ளது.
எனவே, ஆன்லைனில் தேடும் போது எச்சரிக்கையுடன் செயல்படவும், அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக கணக்குகளை மட்டுமே வாடிக்கையாளர்கள் நம்பியிருக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான நிறுவனங்களும், அதிகாரிகளும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
உதாரணமாக, உலகின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸின் பெயரைக் கொண்டு புனித ரமலான் மாதத்தில், ஆன்லைன் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டுள்ளது. அதில், “Emirates Ramadan gift” என்ற தலைப்பில் நான்கு எளிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பங்கேற்பாளர்களுக்கு சுமார் 8,000 திர்ஹம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த லிங்க்கை ஐந்து குழுக்கள் அல்லது 20 நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறும், மேலும் 5 முதல் 7 நாட்களுக்குள் பரிசுகளை வழங்க பங்கேற்பாளர்களின் முகவரியை உள்ளிடுமாறும் மோசடி கும்பல் பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
இதனைத் தொடர்ந்து புனித ரமலான் மாதத்தில் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆன்லைன் விளம்பரங்கள் பரவி வருவதை அறிந்த துபாயின் முதன்மை கேரியர் எமிரேட்ஸ், இது போன்ற ரொக்கப்பரிசு பிரச்சாரத்தை எமிரேட்ஸ் நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்தது மட்டுமின்றி, அதிகாரப்பூர்வமற்ற ப்ரோமோஷன்களில் பங்கேற்பதற்கு எதிராக வாடிக்கையாளர்களையும் எச்சரித்துள்ளது.
மேலும், எமிரேட்ஸின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ப்ரோமொஷன்கள் அதன் அதிகாரப்பூர்வ சேனல்களில் நடத்தப்படுவதாகவும், குறிப்பாக அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் நீல நிற டிக் மூலம் குறிக்கப்பட்டுள்ளன என்றும் எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதேசமயம், இது போன்ற ப்ரோமொஷன்கள் அதிகாரப்பூர்வமானது அல்ல என்றும், ஆன்லைன் மோசடிகளில் எச்சரிக்கையாக இருக்குமாறும் வாடிக்கையாளர்கள் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.