UAE: விசிட் விசாவில் ஒரு நாள் கூட அதிகமாக தங்க வேண்டாம்.. 2,000 திர்ஹம்ஸ் அபராதம்.. டிராவல் ஏஜென்டுகள் தொடர்ந்து எச்சரிக்கை…
ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் விசாவில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் ஒரு நாள் கூட அதிகமாக தங்க வேண்டாம் என்று டிராவல் ஏஜென்டுகளால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு காலம் கடந்து ஒரு நாள் தங்கியிருப்பவர்கள் கூட தடுப்புப்பட்டியலில் (blacklist) சேர்க்கப்படலாம் மற்றும் தலைமறைவானவர்கள் என்று குற்றம் சாட்டப்படலாம் என்று டிராவல் ஏஜென்டுகள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், தடுப்புப்பட்டியலில் உள்ளவர்கள் UAE மற்றும் பிற GCC நாடுகளுக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே, காலாவதியான விசாவைக் கொண்ட சுற்றுலாவாசிகள் உடனடியாக தேவையான ஏற்பாடுகளைச் செய்து நாட்டை விட்டு வெளியேறுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் 30 அல்லது 60 நாட்கள் விசிட் விசாவில் நுழையும் விசிட்டர்கள், டிராவல் ஏஜென்ட்டின் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் விசாவைப் பெறுவார்கள். இந்நிலையில், பார்வையாளர்கள் நாட்டில் அதிகமாகத் தங்கினால், அபராதமாக ஏஜெண்டுகள் பணத்தை இழக்க நேரிடும் மற்றும் சட்ட நடைமுறைகளை சந்திக்க வேண்டும் என்பதால், தங்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் தலைமறைவாக இருப்பதாக புகாரளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இது பணத்தை இழப்பது பற்றியது மட்டுமல்ல, எங்கள் போர்ட்டலில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விசா விண்ணப்பங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும், எனவே, விசிட்டர்கள் விசா முடிந்தும் தொடர்ந்து நாட்டில் தங்கினால் புதிய விசாக்களுக்கு எங்களால் விண்ணப்பிக்க முடியாது, இதனால் சில சமயங்களில் எங்கள் போர்ட்டலும் தடுக்கப்படலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தலைமறைவு குற்றத்திற்கு குறைந்தபட்ச அபராதம் 2,000 திர்ஹம் ஆகும், இது தினமும் அதிகரிக்கிறது. அதிக நாட்கள் தங்கியிருக்கும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சுற்றுலாவாசிகள் அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் டிராவல் ஏஜென்ட் உரிமையாளர்கள் அறிவுறித்தியுள்ளனர்.
தலைமறைவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டால் வெளியேறுவது எப்படி?
இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட பின்னர், உங்கள் விசாவைச் செயல்படுத்திய ஏஜென்டைத் தொடர்பு கொண்டு அவருக்கு உரிய அபராதத் தொகையை செலுத்த வேண்டும், இதனையடுத்து தலைமறைவு வழக்கை போர்ட்டலில் திரும்பப் பெற்று, நாட்டை விட்டு வெளியேற அவுட்பாஸைப் பெறலாம்.
நாட்டில் தலைமறைவாவது கிரிமினல் குற்றம் என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட சுற்றுலாப் பயணிகளை காவல்துறை கைது செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், விமான நிலையத்தில் விசா ஸ்டேட்டஸை நிறுவ முடியாவிட்டால், அவர்கள் நாடு கடத்தப்படலாம் என்றும் ஒரு சில டிராவல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் விசிட்டில் வரும் பெரும்பாலான சுற்றுலாவாசிகள் தங்கள் விசா காலாவதி தேதியை மறந்து விடுகிறார்கள், எனவே விசா காலாவதியாகும் ஐந்து நாட்களுக்கு முன்பு உங்கள் தொலைபேசியில் நினைவூட்டலை வைத்திருப்பது நல்லது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.