அமீரக செய்திகள்

UAE: வாகனத்தை முந்திச்செல்ல முயன்றதால் விபத்து.. பறிபோன இரு உயிர்கள்.. எச்சரிக்கும் காவல்துறை..!!

ஃபுஜைராவில் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் அமீரகத்தை சார்ந்த இரண்டு இளம் எமிராட்டிகள் உயிரிழந்துள்ளனர். ஃபுஜைராவில் உள்ள மசாஃபி பகுதியை, திப்பா-மசாஃபி தெருவுடன் இணைக்கும் சாலையில் கடந்த மே.6 ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடந்த பயங்கர சாலை விபத்தில் 19 வயது ஆண் மற்றும் 28 வயது பெண் ஆகிய இருவரும் உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து ஃபுஜைரா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்துப் பிரிவின் இயக்குநர் கர்னல் சலே முகமது அப்துல்லா அல் தன்ஹானி என்பவர் கூறுகையில், மசாஃபி ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த இரு கார்கள் ஒன்றையொன்று தாறுமாறாக முந்திச் செல்ல முயன்ற போது, இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விபத்துக் குறித்த தகவல் கிடைத்ததும்  போலீஸ் போக்குவரத்து ரோந்து மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ பகுதிக்கு உடனடியாக விரைந்து சென்றதாகவும், எனினும் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து முறையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருவரின் சடலங்களும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சாலைகளில் வாகனங்களை தாருமாறாக ஓட்டுவது, முன் செல்லும் வாகனத்தை தவறாக முந்திச் செல்வது  போன்ற சட்டவிரோதமான நடத்தைகளைக் கைவிடுமாறு வாகன ஓட்டிகளுக்கு ஃபுஜைரா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!