துபாய் விமான நிலைய ஓடுபாதை திட்டமிட்டப்படி மீண்டும் திறக்கப்படும்.. அதிகாரிகள் தகவல்..!
உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையமான “துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் DXB”யில் வடக்கு ஓடுபாதையை சீரமைப்பதற்கான கால அளவில் குறித்த நேரத்தில் பூர்த்தி செய்யப்படும் என்று துபாய் விமான நிலையம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் திறமையான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காகவும் விமான நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மே 9 முதல் ஜூன் 22 வரை பராமரிப்பு பணி நடைபெறும் என்று விமான நிலையம் தெரிவித்திருந்தது.
இதனால் ஏற்படும் விமானங்களின் தாமதங்கள் மற்றும் இடையூறுகளை குறைக்க, விமானங்களை துபாயின் இரண்டாவது விமான நிலையமான அல் மக்தூம் விமான நிலையத்திற்கும், துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் (DWC) விமான நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளன.
தற்போது இத்திட்டத்தின் செயலாக்க நிலைகளில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், திட்டமிட்டபடி ஜூன் 22ஆம் தேதி ஓடுபாதை மீண்டும் திறக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பராமரிப்பு பணி தொடங்கிய மே 9ஆம் தேதியிலிருந்து, 1,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் 3,000 பேர் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் 24 மணிநேரமும் வேலை செய்து, விரைவாக திட்டத்தை முடிக்க செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.