அபுதாபிக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக கண்காணிப்பு சாதனத்தை அணிய வேண்டும்..!! எதிஹாட் ஏர்வேஸ் அறிவிப்பு..!!
வெளிநாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் பயணிகள் 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் போது கண்காணிப்பு சாதனத்தை (wristband) கையில் கட்டாயம் அணிய வேண்டும் என்று அபுதாபியை மையமாகக் கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அபுதாபி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் பயணிகளுக்கு மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட Tag -ஐ வழங்கி வருகின்றனர்.
“அபுதாபிக்கு வந்ததும் நீங்கள் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும். சுய தனிமை வீட்டிலேயே நடக்க வேண்டும், மேலும் நீங்கள் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு சாதனத்தை கையில் அணிய வேண்டும். அபுதாபி விமான நிலையத்தில் வந்திறங்கிய பின்னர் இமிகிரேஷனை முடித்தவுடன் உங்களுக்கு கண்காணிப்பு சாதனம் வழங்கப்படும்” என எதிஹாட் ஏர்வேஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் கூறியுள்ளது.
மேலும், டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், 18 வயதிற்கு உட்பட்டவர், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் அதிக ஆபத்து இருப்பதாகக் கருதப்படும் ஒரு நாட்டிலிருந்து வரும் பயணிகளை அரசாங்கத்திற்கு சொந்தமான தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் கூறப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பயணிகளுக்கு சுய தனிமைப்படுத்த ஒப்புக் கொள்ளும் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறும், அதனை தங்களின் பயணத்திற்கு முன்பே பூர்த்தி செய்யுமாறும் பரிந்துரைப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் அனைத்து பயணிகளும் அபுதாபி விமான நிலையத்தில் வெப்ப பரிசோதனை மற்றும் கொரோனாவிற்கான PCR சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.