அமீரக செய்திகள்

துபாய்: செல்ல வேண்டிய இடம் தெரிவிக்காமலேயே லிமோசினை குறிப்பிட்ட மணி நேரம் வாடகைக்கு எடுக்கலாம்..!! புதிய சேவைகளை அறிவித்துள்ள DTC..!!

துபாயில் உள்ளவர்கள் துபாய் டாக்ஸி கார்ப்பரேஷனின் (DTC) செயலியை பயன்படுத்தி குறிப்பிட்ட மணி நேர வாடகை கணக்கிற்கு லிமோசினை புக் செய்யலாம் என்று புதிய சலுகைகளை நிறுவனம் அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனடிப்படையில் லிமோசின் பயணிகள், துபாய் டாக்ஸி கார்ப்பரேஷனின் (DTC) செயலியை பயன்படுத்தி ‘மணிநேர வாடகை (Hourly Rental)’ அடிப்படையில் செல்ல வேண்டிய இலக்கை குறிப்பிடாமல் பல பயணங்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயணிகள் இந்த இடத்திற்கு தான் செல்ல வேண்டும் என்று ஓட்டுநருக்கு வழிகாட்டலாம். மேலும் ஒரே பயணத்தின் பொழுது பல்வேறு நிறுத்தங்கள் இருந்தால் இடையில் வாகனத்தை நிறுத்தி ஒரு பணியினை முடித்த பின்பு, வேறு இடத்திற்கு செல்லலாம். இதன் மூலம் பல இடங்களுக்கு செல்வதற்கு ஒரே ஒரு தடவை புக் செய்தால் போதுமானது என்று கூறப்படுகின்றது.

மேலும் இந்த சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வெவ்வேறு வாகனங்களுக்கு மாறுவதற்கு பதிலாக, ஒரே வாகனத்தில் பயணம் செய்து கொண்டே அனைத்து பணிகளையும் முடிக்கலாம் என்பதால் பயணிகளின் நேரம், ஆற்றல் மற்றும் செலவு ஆகியவை கணிசமாக குறையும் என கூறப்படுகின்றது.

மேலும் இந்த மணிநேர வாடகை என்ற சலுகையானது குடியிருப்பாளர்கள், சுற்றுலாப் பயணிகள் என அனைவருக்கும் பொருந்தும் எனவும், ஹோட்டல்கள், டூர் ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள் மற்றும் பிற பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் சுற்றுலா வசதிகளுக்கு ஏற்ப வாகனங்களை புக் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல புதிய சேவைகள்:

DTC செயலியில் தற்பொழுது கிடைக்கும் நான்கு ஸ்மார்ட் சேவைகளில் இந்த கீழ் குறிப்பிட்ட புதியசலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளது.

DTC ‘லாஸ்ட் அண்ட் ஃபவுன்ட் சர்வீஸ்’ என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயணத்தின் போது தங்களுடைய உடமைகளை இழந்த பயணிகள் டிரைவருடன் தொடர்பு கொண்டு தங்களது உடைமைகளை பெறலாம்.

கூடுதலாக, DTC ஸ்மார்ட் பயன்பாட்டில் ‘மீட் மீ ஹியர்’ சேவை சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்களது துல்லியமான இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். எனவே நண்பர்களை எளிதாக குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், ஷேர் மை ட்ரிப் ஸ்டேட்டஸ் சேவையானது, பயனர்கள் தங்கள் பயண நிலையைத் துல்லியமாக அவர்களது குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ பகிர்ந்து கொள்ள உதவுகிறது. எனவே பயணிகள் தற்பொழுது எங்கு இருக்கின்றார்கள், அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதை வீட்டில் இருந்தவாறு குடும்பத்தினர் தெரிந்து கொள்ளலாம்.

இந்த சேவைகளின் துவக்கமானது, துபாய் டாக்ஸி கார்ப்பரேஷனின் தலைமையின் வழிகாட்டுதலின்படி மக்களுக்கு பல நல்ல சேவைகளை வழங்குவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் மூலம், துபாயில் சொந்தமாக வாகனம் இல்லாத மக்கள், இனி குறிப்பிட்ட இடங்களுக்கு கவலையின்றி செல்வதற்கு இந்த செயலி மிகவும் உபயோகமாக இருப்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
error: Content is protected !!