ஓமான்: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு விபத்துகள் குறைந்திருப்பதாக தகவல்..!! புள்ளிவிபரங்கள் வெளியீடு..!!
ஓமானில் போக்குவரத்து விபத்துகளுக்காக வழங்கப்படும் இன்சூரன்ஸ் தொகை பற்றிய புள்ளி விவரங்களை இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டின் முதல் பாதியில் கோரப்பட்ட இழப்பீடு தொகையானது 11.7 மில்லியன் ரியாலைத் தாண்டியுள்ளது என புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதுவரை செலுத்தப்பட்ட இழப்பீடு 15% எட்டியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் கேப்பிட்டல் மார்க்கெட் அத்தாரிட்டி வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதுவரை 37,000 விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 7,763 விபத்துக்கள் தீவிர விபத்துகளாகவும், 29,600 விபத்துக்கள் சிறிய விபத்துகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சதவீதமானது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது 1.7% குறைவு என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.
2022 ஆம் ஆண்டில் முதல் பாதியில் 13.9 மில்லியன் ரியால் இழப்பீடு தொகை கோரப்பட்டிருந்தது. அதுவே இந்த ஆண்டு 11.7 மில்லியன் ரியால் உடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் குறைவாகும். மேலும் காப்பீட்டிற்கான கோரிக்கைகளும் சென்ற ஆண்டு 44,000 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் இந்த ஆண்டு 41,000 என பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சிறு விபத்துகளுக்கு இதுவரை 5.7 மில்லியன் ரியால் தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19 சதவீதம் குறைந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. அதே சமயம்,பொருள் சேதத்தை விளைவித்த கடுமையான விபத்துக்களைப் பொறுத்தவரை, அவற்றின் இழப்பீட்டு மதிப்பு 3.7 மில்லியன் ரியாலைத் தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டின் முதல் பாதியில் காயங்கள் மற்றும் மருத்துவச் சிகிச்சைச் செலவுகளை விளைவித்த கடுமையான விபத்துக்கள் 5 சதவிகிதம் குறைந்து, இழப்பீடு தொகையானது 2 மில்லியன் திர்ஹமிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளன. சென்ற ஆண்டு, இதே காலகட்டத்தில் இழப்பீடு தொகையானது 275,000 ரியால் என பதிவாகியது குறிப்பிடத்தக்கதாகும். புள்ளி விவரங்கள் அனைத்தும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஓமானில் விபத்துக்கள் குறைந்துள்ளது என்பதை எடுத்துரைக்கின்றன.