அமீரக செய்திகள்

UAE: சிறந்த துப்புரவு பணியாளருக்கான விருதில் முதலிடம் பிடித்த இந்தியப் பெண்.. 100,000 திர்ஹம்ஸ் வெகுமதியுடன் பரிசுகளை வழங்கி கௌரவித்த அபுதாபி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மெடிக்கல் சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வரும் தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த பமீலா கிருஷ்ணன் என்கிற 51 வயதான துப்புரவுப் பணியாளர், அபுதாபியில் அவரது சிறந்த பணிக்காக ஒரு விருதை வென்றதுடன்,  வெகுமதியாக 100,000 திர்ஹம்ஸுக்கான காசோலையையும் பெற்று அசத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பமீலாவுக்கு ஆயுள் காப்பீட்டுக் கொள்கை, ஒரு ஷாப்பிங் கார்டு, தள்ளுபடி வழங்கும் ஒரு ஃபஸா (Fazaa) கார்டு, ஒரு Dh5 தங்க நாணயம் மற்றும் அங்கீகாரத்தின் ஒரு பகுதியாக, ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரண்டு இரவு தங்குவதற்கான கூப்பன் ஆகியவையும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மலையாள மொழி மட்டுமே பேச தெரிந்த பமீலா, எமிரேட்ஸ் லேபர் மார்க்கெட் விருதின் சிறப்புமிக்க பணியாளர்களுக்கான ஒரு குறிப்பிட்ட பிரிவில் முதலிடத்தை வென்றதன் மூலம் அனைவரது பாராட்டையும் வென்றுள்ளார். மேலும் பல சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மத்தியில் மற்ற வெற்றியாளர்களுடன் கோப்பையையும் சான்றிதழையும் வாங்கிய போது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், “எனக்கு சேவை செய்ய இந்த வாய்ப்பை வழங்கியதற்காக கனேடிய மருத்துவ மையத்தின் (CMC) குழுமத்தின் CEO முபாரக் பின் ஃபலாவுக்கும், என்னை இந்த விருதுக்கு பரிந்துரைத்த நிர்வாகத்திற்கும் நான் என்றென்றும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தனது நன்றியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய பமீலா, தனது வீட்டைக் கட்டுவதற்கும், தனது மகன் மற்றும் மகளின் திருமணத்திற்காகவும் மற்றும் தங்க நகைகளை வாங்கவும் கடன்களை வாங்கியிருப்பதாகவும், 100,000 திர்ஹம் நிவாரணம் தன் கடன்களை அடைக்க பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர், டெல்மா ஸ்ட்ரீட்டில் (Delma Street) உள்ள கனடியன் மெடிக்கல் சென்டரின் (CMC) கிளையில் 13 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வரும் பமீலா இந்த விருதுக்கு பரிந்துரைத்தது பற்றி கேட்கப்பட்ட போது, எந்தச் சூழ்நிலையிலும் அவர் சிரித்துக் கொண்டே அவரது 100% உழைப்பைக் கொடுப்பார் என்றும், அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை கௌரவிக்கும் விதமாகவே அவரை நிறுவனம் பரிந்துரைத்ததாகவும் அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிதிச் சிக்கலில் தவித்து வந்த பமீலாவின் கணவர் விஜய்குமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், இருப்பினும் மனம் தளராத பமீலா தன் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தனது வேலையை அர்ப்பணிப்புடன் செய்து வந்ததாகவும், அதன் பலனாகவே இந்த விருதை அவர் வென்றுள்ளார் என்றும் அவரின் நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!