அமீரகத்தில் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு.. 2024ல் அதிக செலவை ஏற்படுத்தும் 6 விஷயங்கள் என்னென்ன??
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்களின் மன அழுத்தத்திற்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே முக்கியக் காரணம் என்றும், அதைத் தொடர்ந்து தனிப்பட்ட மற்றும் குடும்ப பொருளாதாரச் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறியுள்ளதாக ஒரு கணக்கெடுப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, குடியிருப்பாளர்கள் இந்த ஆண்டும் தங்களின் செலவுகளை அதிகரிக்க வேண்டிய சூழல் இருப்பதால், இந்த கவலை இந்தாண்டும் தடையின்றி நீடிக்கும் என்றும் கருதப்படுகிறது. இப்படியான நிலையில், 2024 இல் உங்கள் வாழ்க்கைச் செலவை அதிகரிக்க காத்திருக்கும் 6 விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். அதனை பின்வருமாறு காணலாம்.
1. அதிக வாடகை:
துபாயில் குடியிருப்புகளின் வாடகைகள் 2024 இல் தொடர்ந்து உயரும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, குடியிருப்பாளர்களின் சம்பளத்தில் வாடகைகளுக்கு மிகப்பெரிய தொகையை ஒதுக்க நேரிடும். மேலும், இந்தாண்டு பிரதான குடியிருப்பு பகுதிகள் 20 சதவீதம் வரை வாடகை உயர்வு காணும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, அதிகளவிலான தொழில் வல்லுநர்களின் வருகை மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் அதிகரித்து வரும் முதலீடு உள்ளிட்ட பல காரணங்களால் வாடகை உயர்வு இருப்பதாக சொத்து நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அத்துடன், அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகம் இருக்கக்கூடிய துபாய் மெரினா, ஜுமேரா வில்லேஜ் டிஸ்ட்ரிக்ட், பிசினஸ் பே, டவுன்டவுன் துபாய் மற்றும் ஜுமேரா லேக் டவர்ஸ் போன்ற பகுதிகளும், அதே போன்று வில்லாக்களுக்கு பெயர் பெற்ற இடங்களான துபாய் ஹில்ஸ், அல் பர்ஷா, ஜுமேரா மற்றும் டமாக் ஹில்ஸ் ஆகிய பகுதிகளிலும் தேவை மற்றும் பிரபலத்தின் அடிப்படையில் வாடகை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2. பரிவர்த்தனை கட்டணம்:
நாட்டில் எக்ஸ்சேஞ்ச் ஹவுஸ் மூலம் வீட்டிற்கு பணம் அனுப்பும் குடியிருப்பாளர்கள் இப்போது அதிக சேவை கட்டணத்தை செலுத்த வேண்டும். அதாவது, அமீரகத்தில் இருந்து பணம் அனுப்பும் வெளிநாட்டவர்கள் 15 சதவீதம் அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும் மொபைல் ஆப் பயனர்களுக்கு கட்டணம் மாறாமல் இருக்கும்.
இந்தியா, எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் பிற ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணம் அனுப்பும் பெரும்பாலான பணப்பரிமாற்றங்களுடன் ஐக்கிய அரபு அமீரகம் உலகின் மிகப்பெரிய பணம் அனுப்பும் சந்தைகளில் ஒன்றாக உள்ளது.
3. சாலிக் கேட்:
RTA கூடுதலாக இரண்டு புதிய டோல் கேட்களை அறிவித்திருப்பதால், இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் துபாயில் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சாலிக் கேட்டிற்கு அதிகம் செலவிடுவார்கள். ஒன்று அல் கைல் சாலையில் உள்ள பிசினஸ் பே கிராஸிங்கிலும் மற்றொன்று ஷேக்கின் அல் சஃபா தெற்கிலும் அமைந்துள்ளது.
இரண்டு புதிய டோல் கேட்கள் துபாயில் உள்ள சாலிக்கின் மொத்த டோல் கேட்களின் எண்ணிக்கையை எட்டிலிருந்து பத்தாக உயர்த்துகிறது. ஒவ்வொரு முறை சாலிக் கேட்களைக் கடந்து செல்லும் போதும் 4 திர்ஹம்ஸ் என்ற டோல் கட்டணம் தானாகவே கழிக்கப்படும்.
புதிய சுங்கச்சாவடியால் கார் உரிமையாளர்களின் மாதச் செலவுகள் மட்டுமின்றி டாக்ஸிகளைப் பயன்படுத்தும் பயணிகளும் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு டாக்ஸி சாலிக் கேட் வழியாக செல்லும் போது, இறுதிக் கட்டணத்தில் 4 திர்ஹம்ஸ் சேர்க்கப்படும். இந்த கூடுதல் செலவு நிச்சயமாக மாதாந்திர குடும்ப பட்ஜெட்டில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
4. கட்டண பார்க்கிங்:
சுமார் 13,000 க்கும் மேற்பட்ட பார்க்கிங் இடங்களை கொண்டுள்ள துபாய் மாலில் இலவச பார்க்கிங்கை அனுபவிக்கும் கடைக்காரர்கள் விரைவில் சேவைக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக, சாலிக் இந்த பார்க்கிங் சேவைக்கான தொந்தரவு இல்லாத அமைப்பைச் செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணங்களை எமார் மால்ஸ் இன்னும் வரையறுக்கவில்லை, ஆனால் கட்டணம் சாலிக் பயனர் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
வாகனங்கள் பார்க்கிங் தளத்திற்குள் நுழையும் போது ஒரு கேமரா பிளேட் எண்ணைப் படம்பிடித்து, நுழைவு நேரத்தைப் பதிவு செய்யும். பின்னர் அந்த வாகனம் வெளியேறும் போது, கேமரா மீண்டும் பிளேட் எண்ணை ஸ்கேன் செய்து அதன் மொத்த பார்க்கிங் நேரத்தை கணினி கணக்கிட்டு சாலிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
5. தங்கம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டு தங்கத்தின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக, மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள், செங்கடலில் அவ்வப்போது நடைபெறும் தாக்குதல்கள், ரஷ்யா-உக்ரைன் போர், முக்கிய பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் நடக்கவுள்ள தேர்தல்களில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் சீனா தலைமையிலான மத்திய வங்கி கொள்முதல் ஆகியவை 2024 இல் தங்கத்தின் விலையை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
6. வாழ்க்கைத் தரம்
2024 இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் NBD ஆராய்ச்சியின்படி, அமீரகத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) கடந்த ஆண்டு 3.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 3.0 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த விலை உயர்வுக்கு முக்கியமாக உலகளாவிய நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் பிரச்சினைகள், நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் பொருட்கள் விநியோகம் சார்ந்த லாஜிஸ்டிக் துறையில் ஏற்படும் சவால்கள் காரணமாக இருக்கும் என்றும் அந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel