T20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஓவியத்துடன் வானில் பறக்கும் எமிரேட்ஸ் A380 விமானம்..!!
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் T20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டு நேற்று முதல் தகுதி சுற்றுகளுக்கான போட்டிகளும், வார்ம் அப் போட்டிகளும் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், உலகின் மிக பெரிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான இந்த T20 உலகக்கோப்பை போட்டிகள் துபாயில் நடப்பதை முன்னிட்டு, துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம், அதன் ஏ 380 வகையை சார்ந்த விமானத்தில் T20 உலகக் கோப்பை போட்டிக்கான தீமில் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட விமானத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்படும் 20 ஓவர்களை கொண்ட இந்த குறுகியகால உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 17 ம் தேதி ஓமான் தலைநகரான மஸ்கட்டில் தொடங்கி அடுத்த மாதம் நவம்பர் 14 ம் தேதி துபாயில் நிறைவடையவுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் நடத்தப்படும் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரே தற்பொழுது வரையில் வளைகுடா நாடுகளில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாக இருக்கும்.
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரியளவில் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த, கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டிகளில் ஒன்றான இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 24 ம் தேதி அன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. மேலும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விற்றும் தீர்ந்து விட்டது.
இது தவிர, உலகளவில் அதிகளவிலான கிரிக்கெட் ரசிகர்களால் பார்க்கப்படும் கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் IPL போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.