அமீரக செய்திகள்

துபாய் விசாவில் பயணிப்பவர்கள் மற்ற எமிரேட்களில் நுழையத் தடையா..? வாட்ஸ்அப்பில் பரவும் செய்திக்கு பயண முகவர்களின் பதில் என்ன?

துபாய் விசாவில் பயணிப்பவர்கள் வேறொரு எமிரேட்டில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முடியாது என அண்மையில் சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களால் பயணிகள் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர். அதாவது, துபாயில் இருந்து வழங்கப்பட்ட விசா கொண்ட பயணிகள் மற்ற எமிரேட்களுக்குள் நுழைய முடியாது என்றும், மீறி நுழைந்தால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்தச் செய்தி பரவலாக வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளிடமிருந்து ஏராளமான கேள்விகளை அமீரகத்திலும் மற்றும் பிற நாட்டிலும் உள்ள பயண முகவர்கள் பெற்றுள்ளனர். மேலும், இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதால், பயண முகவர்கள் வைரலாகி வரும் இந்த தகவலை மறுத்துள்ளனர்.

இது குறித்து அமீரகத்தில் டிராவல் ஏஜென்ஸி வைத்திருக்கும் ஒருவர் கூறுகையில், அமீரக விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தில் உள்ள எந்த விமான நிலையத்திலும் நுழைய முடியும் என்பதால் இது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, நாடுகடத்தப்படுவார்கள் என்பதற்கு கணிசமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதாலும், இந்த தகவல்கள் துல்லியமாக இல்லை என்பதாலும், இதுபோன்ற செய்திகளை நம்புவதற்கு முன் பயணிகள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் பயண முகவர்கள் வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், புதன்கிழமை கொச்சியில் இருந்து ஷார்ஜா சர்வதேச விமான நிலையம் வழியாக அமீரகம் வந்தடைந்த இந்திய சுற்றுலாப் பயணி அக்ரம் அகமது என்பவர், தான் துபாய் விசாவில் ஷார்ஜா வந்ததாகவும், விமான நிலையத்தில் தனக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் தனது அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த தகவல் குறித்து அவரது பயண முகவரிடம் கேட்ட போது, நாடு கடத்தப்படுவதாக பரவி வரும் தகவல் போலியானது என்று அவர் கூறியதாகவும், எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று அவர் உறுதியளித்ததாகவும் அஹமது தெரிவித்துள்ளார்.

இது பற்றி மற்றொரு டிராவல் நிறுவன உரிமையாளர் கூறுகையில், இந்த தகவலைப் பற்றி தீவிரமாக விசாரித்து வருவதாக கூறியதுடன், அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நாடு கடத்தல் கோரிக்கைகளை சரிபார்க்க உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்பதை பொதுமக்களுக்கு தான் உறுதியளிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இவர்கள் தவிர, அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் வாடிக்கையாளர் பராமரிப்பு முகவரும் பரவி வரும் இந்த செய்தி ஆதாரமற்றது என்பதை உறுதிப்படுத்தியதுடன், துபாய் விசாவில் பயணம் செய்யும் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் எந்த விமான நிலையத்தின் வழியாகவும் நாட்டிற்குள் நுழைய முடியும் என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.

இருப்பினும், தற்போது வைரலாகி வரும் இந்த தகவல் சில பயணிகளிடையே கவலையைத் தூண்டியிருப்பதால், பயணம் சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் தகவலை மட்டுமே நம்புமாறும் பயணிகளை பயண முகவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!