அமீரக அரசு அறிவித்த புதிய கட்டாய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் நன்மைகள் என்ன? முழு விபரங்களும் இங்கே..!!
UAE அரசாங்கம் அடுத்த ஆண்டு முதல் அனைத்து தனியார் துறை ஊழியர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கும் கட்டாய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும் இத்திட்டம் தனியார் துறை ஊழியர்களும் தரமான சுகாதார மருத்துவ சேவையை அணுகுவதை உறுதி செய்யும் வகையில் நடைமுறைக்கு கொண்டு வருவதாகவும் அமீரக அரசு தெரிவித்திருந்தது.
அமீரக அரசின் இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தால் முதலாளிகளுக்கு செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றாலும், தங்கள் ஊழியர்களுக்கு ஒரு நல்ல காப்பீட்டுத் தொகுப்பை உறுதிசெய்வது நிறுவனத்திற்கு திறமையான நபர்களை ஈர்க்கவும், நிரந்தரமாக தக்கவைக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த கட்டாய மருத்துவ காப்பீட்டு திட்டம்?
அமீரகத்தைப் பொறுத்தவரையில், தற்போது அபுதாபி மற்றும் துபாய் ஆகிய இரண்டு எமிரேட்களில் மட்டுமே முதலாளிகள் தங்கள் ஊழியருக்கு உடல்நலக் காப்பீடு பெறுவதைக் கட்டாயமாக்கும் சட்டங்கள் உள்ளன. ஆனால், மற்ற ஐந்து எமிரேட்களிலும் அது போன்ற கட்டாய சட்டம் எதுவும் இல்லை. ஆகவே இந்த புதிய திட்டம் முதலாளிகள் நாடு முழுவதும் உள்ள தங்கள் ஊழியர்களுக்கு காப்பீடு பெறுவதைக் கட்டாயமாக்குகிறது.
துபாயில், முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு ஒரு மருத்துவ காப்பீடு வழங்குவது கட்டாயமாகும். இதில் ஊழியர்களின் குடும்பங்களுக்கு கவரேஜ் வழங்கப்படாது. ஆனால், அபுதாபியில் முதலாளிகள் மற்றும் ஸ்பான்சர்கள் தங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு (ஒரு மனைவி மற்றும் 18 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள்) கட்டாயமாக கவரேஜ் வழங்க வேண்டும்.
காப்பீட்டுத் திட்டத்திற்கு யார் பணம் செலுத்த வேண்டும்?
அமீரகச் சட்டத்தின் படி, நாட்டில் உள்ள நிறுவனங்களின் முதலாளிகளே தங்கள் ஊழியர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களின் மருத்துவக் காப்பீட்டுக் கவரேஜுக்கான பணத்தை செலுத்த வேண்டும்.
அரசு இந்த விதியை எப்படி அமல்படுத்தும்?
இது தொடர்பாக UAE அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் ரெசிடென்சி அனுமதிகளை வழங்கும் போது அல்லது ஏற்கனவே பணிபுரிபவர்களின் விசாவை புதுப்பிக்கும் போது பணியாளர்களுக்கான கட்டாய மருத்துவக் காப்பீட்டைப் பெற வேண்டும்.
அதாவது, அபுதாபி மற்றும் துபாயில் உள்ளதைப் போல மற்ற ஐந்து எமிரேட்களிலிருந்து வழங்கப்பட்ட விசாவின் கீழ் பணிபுரியும் பணியாளருக்கு சரியான சுகாதார பாதுகாப்பு இல்லாவிட்டால், புதிய விசாக்கள் வழங்கப்படாது அல்லது புதுப்பிக்கப்படாது.
அபராதம் விதிக்கப்படுமா?
புதிய திட்டத்திற்கான தண்டனை நடவடிக்கைகள் இன்னும் சம்பந்தப்பட்ட ஆணையத்தால் குறிப்பிடப்படவில்லை. எனினும், அபுதாபி மற்றும் துபாயில் ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு, ஒரு தனிநபருக்கு மாதம் 300 முதல் 500 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.
கவரேஜ் விபரங்கள்:
அமீரக அரசாங்கம் இதுவரை புதிய கட்டாய காப்பீட்டுத் திட்டத்தின் கவரேஜ் விபரங்களின் விபரங்களை வெளியிடவில்லை. எவ்வாறாயினும், துபாய் மற்றும் அபுதாபியில் பின்பற்றப்படுவதைப் போன்றே மற்ற எமிரேட்களிலும் நடைமுறைக்கு கொண்டு வரவும் வாயப்புள்ளது.
அதாவது, துபாயில் மாதத்திற்கு 4,000 க்கும் குறைவான சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு வழங்கும் கவரேஜில் அவசரநிலைகள், அறுவை சிகிச்சைகள், மருத்துவ நோயறிதல், மருந்துகள், வெளிநோயாளர் மற்றும் உள்நோயாளி சிகிச்சைகள் மற்றும் மகப்பேறு பராமரிப்பு ஆகியவை அடங்கும்.
இவற்றுடன் சில குறிப்பிட்ட நிபந்தனைகளும் வரம்புகளும் கவரேஜ்ஜில் உள்ளன. அதாவது, அபுதாபியில் நடைமுறையில் உள்ளது போல, காப்பீடு செய்யப்பட்ட நபர் மருத்துவ செலவின் குறிப்பிட்ட பகுதியை, அதாவது குறிப்பிட்ட சதவீதம் எனும் அடிப்படையில் அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel