அமீரக செய்திகள்

ஈத் விடுமுறையின் 3 நாட்களில் மட்டும் துபாய் மெட்ரோ, பஸ்ஸில் பயணித்த 59 லட்சம் பேர்.. லீவு நாள் அதுவுமா எங்கதான்யா போறீங்க.?

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ஈத் அல் பித்ருக்கான மிகவும் நீண்ட விடுமுறை நாட்களை அமீரக குடியிருப்பாளர்கள் சிறப்பாக கொண்டாடினர். மேலும், சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஒரு வசனத்தைப் போன்று, “லீவு நாள் அதுவுமா எங்கதான்யா போறீங்க” என்று பலரையும் கேட்க வைக்கும் அளவிற்கு, குடியிருப்பாளர்கள் அங்கும் இங்கும் என அமீரகமெங்கும் சுற்றி சுற்றி வந்தனர்.

இவ்வாறிருக்க, ஈத் விடுமுறையின் போது மட்டும், அதாவது கடந்த மூன்று நாட்களில் (ஏப்ரல் 10 – 12) மட்டும் துபாயில் சுமார் 59 லட்சம் மக்கள் எமிரேட்டின் பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

துபாயை பொருத்தவரை பேருந்து, மெட்ரோ, டிராம், வாட்டர் டாக்ஸி, டாக்ஸி மற்றும் அப்ரா படகு என பல பொது போக்குவரத்து வசதிகளை துபாய் குடியிருப்பாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.  அதிலும் குறிப்பாக, துபாயில் மிகவும் பிரபலமான போக்குவரத்து வசதியான துபாய் மெட்ரோவில் மட்டும் 23.2 லட்சம் பயணிகள் பயணித்ததாக RTA கூறியுள்ளது.

மேலும், RTA வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, ஈத் விடுமுறை நாட்களில் பொதுப் பேருந்துகள் 12 லட்சம் பயணிகளால் பயன்படுத்தப்பட்டதாகம், 4.16 லட்சம் பயணிகள் கடல் போக்குவரத்து வசதி வழியாக பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, எமிரேட்டில் உள்ள டாக்ஸிகள் கிட்டத்தட்ட 10.6 லட்சம் பயணிகளை எமிரேட் முழுவதும் ஏற்றிச் சென்றதாகவும், பகிரப்பட்ட இயக்கம் (shared movement) மூலம் 3.08 லட்சம் பயணிகள் பயணித்ததாகவும் RTA தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், துபாய் குடியிருப்பாளர்கள் தங்களின் ஈத் விடுமுறையை சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக துபாய் முழுவதும் இயங்கும் பேருந்து, மெட்ரோ, டிராம் மற்றும் வாட்டர் டாக்ஸி உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகளின் நேரங்களையும் கடந்த ஒரு வாரம் முழுவதும் RTA நீட்டித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!