அமீரக செய்திகள்

அமீரகத்தில் பெய்த கனமழை இயற்கையா அல்லது செயற்கையா? அனல் பறக்கும் விவாதம்.. உண்மை என்ன?

அமீரகம் முழுவதும் நேற்று கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தற்போது இந்த மழை இயற்கையாக பெய்ததா அல்லது செயற்கையாக பெய்ததா என சமூக ஊடகங்களில் அமீரக குடியிருப்பாளர்கள் பலரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர், அமீரகம் கிளவுட் சீடிங் மூலம் செயற்கையாக மழையை பொழியச்செய்து தங்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கிவிட்டனர் எனவும் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில், அமீரகத்தில் நேற்று பெய்த கனமழை இயற்கையா அல்லது செயற்கையா? அதன் உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து தேசிய வானிலை ஆய்வு மையத்தை சார்ந்த டாக்டர் அஹ்மத் ஹபீப் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், நாட்டில் நிலவிய தீவிர வானிலையின் போது, ​கிளவுட் சீடிங் எதுவும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இணையத்தில் பரவும் செய்தி முட்டாள்தனமானது என்று குறிப்பிட்டதுடன், இந்த காலகட்டத்தில் சீடிங் நடவடிக்கைகளுக்காக விமானிகள் யாரும் அனுப்பப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார். அமீரகத்தில் கிளவுட் சீடிங் நடவடிக்கைகள் பொதுவாக மேற்கொள்ளப்பட்டாலும், கடுமையான புயல்களின் போது அல்லது இடி, மின்னல் போன்ற அதிக ஆபத்து ஏற்படும் போதெல்லாம் அத்தகைய பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

அத்துடன், கிளவுட் சீடிங் என்பது மழைக்கு முன், மேகங்களின் ஆரம்ப உருவாக்கத்தின் போது உப்பு எரிப்புகளால் குறிவைக்கப்படும் நடைமுறை என்று குறிப்பிட்டதுடன், கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் போது இதைச் செய்வது கடினமாகவும் பாதுகாப்பற்றதாகவும் மாறும் என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் பொய்யான தகவல் குறித்து விளக்கமளித்துள்ளார்.

வரலாறு காணாத மழைக்கு என்ன காரணம்?

நேற்று காற்றழுத்த தாழ்வு நிலை ஏன் இவ்வளவு தீவிரத்துடன் வந்தது என்பது குறித்து டாக்டர் ஹபீப் விவரிக்கையில், “அரபிக்கடலில் இருந்து உருவாகும் சூடான, ஈரமான காற்று ஓமான் மற்றும் அமீரகத்தை நோக்கி பாய்கிறது. அதே நேரத்தில், மேல் வளிமண்டலத்தில் குறைந்த அழுத்த நிலை நிலவியது. எனவே, அமீரகத்தின் மீது ஈரப்பதத்தின் அளவு தீவிரமடைந்தது, இதனால் மேற்பரப்பு வெப்பம் மற்றும் மேல்-நிலை குளிர்ச்சியுடன் சேர்ந்து கொண்டது. இது சூடான காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஒடுக்கியது. இந்த காரணிகளின் கலவையானது நிலையற்ற வானிலைக்கு வழிவகுத்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிலையற்ற வானிலை மீண்டும் திரும்புமா?

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு நோக்கி நகரத் தொடங்கியதால் நாட்டில் லேசான மழை மட்டுமே பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மோசமான நிலை தற்போது முடிந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும், துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளில் மட்டுமே சிறிய மழை பெய்யும் என்றும், நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள மலைகளில் உண்டாகும் மேகங்கள் லேசானது முதல் மிதமான மழைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!