அமீரகத்தில் அடுத்த வாரம் மீண்டும் மழை..!! NCM வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வரலாறு காணாத பெருமழை பெய்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து எமிரேட்களும் மோசமான பாதிப்புகளைச் சந்தித்தது. கனமழையின் தாக்கத்திலிருந்து முழுமையாக மீழுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சரியாக ஒரு வாரம் கழித்து நாட்டில் மீண்டும் மழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (NCM) கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக NCM வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி, செவ்வாய்கிழமை அன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மிதமான காற்று வீசும் என்றும், பின்னர் அது வடமேற்கு நோக்கி நகர்ந்து மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக காற்றின் வேகம் அதிகரித்து, மணிக்கு 40 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் NCM அதன் ஐந்து நாள் முன்னறிவிப்பு அறிக்கையில் கணித்துள்ளது.
NCMஇன் கூற்றுப்படி, இன்றைய தினம் கடலோர மற்றும் உள் பகுதிகள் ஈரப்பதத்துடன் இருக்கும் மற்றும் பனிமூட்டம் அல்லது மூடுபனி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில பகுதிகளில் வானிலை தீவிரமடையக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளிலும் வெப்பநிலை குறையலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.