அமீரகத்தில் வேலையிழந்த நபருக்கு சிறிய தவறால் கிடைக்காமல் போன வேலையின்மை காப்பீட்டு தொகை.. ஏன் தெரியுமா..??

அமீரகத்தில் எதிர்பாராத விதமாக திடீரென வேலையை இழக்கும் நபர்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு புதிய தன்னிச்சையான வேலை இழப்பு (ILOE) திட்டம் ஒன்றை அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இத்திட்டத்தில் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் இணைந்திருக்க வேண்டும் என்றும் திட்டத்தில் இணையாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இவ்வாறு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வேலையை இழந்தவர்களுக்கு காப்பீடு திட்டத்தின் படி இழப்பு தொகை கொடுக்கப்படும் பட்சத்தில் ஒழுங்கீனம், தானாக வேலையை விட்டு நீங்குதல் உள்ளிட்ட காரணங்களுக்கு இந்த காப்பீட்டு தொகை வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில சமயங்களில் கவனக்குறைவாக ஏற்படும் சிறிய தவறுகளினால் கூட உரிய நபர்களுக்கு இழப்பீடு தொகை கிடைக்காமல் போவதாக கூறப்பட்டுள்ளது.
துபாயில் வசித்து வரும் சையத் அகமது என்பவர் தனது அனுபவம் பற்றி கூறுகையில் அவர் வேலையின் ப்ரொபேஷன் பீரியட் (probation period) என்று சொல்லக்கூடிய தகுதிகாண் காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், பின்னர் வேலை இழப்பு காப்பீடு கோரிக்கையும் மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். திடீரென வேலை இழந்தது மட்டுமல்லாமல் வேலை இழந்த போதிலும் காப்பீடு திட்டம் பயனளிக்கும் என நினைத்திருந்த வேலையில் காப்பீட்டிற்கான கோரிக்கை மறுக்கப்பட்டதால் கடும் சிரமத்திற்குள்ளானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் சந்தாதாரர்கள், வேலை இழப்புக்கு முந்தைய ஆறு மாதங்களில் இருந்து அவர்கள் பெற்று வரும் சராசரி அடிப்படை சம்பளத்தில் (basic salary) 60 சதவிகிதம் வரை பெற உரிமை உண்டு. குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு மாதாந்திர பிரீமியத்தை செலுத்திய தகுதியுள்ள ஊழியர்கள் அதிகபட்சமாக தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இந்த பணப் பலனைப் பெறுவார்கள். இருப்பினும், ஒரு சிறிய தவறினால் கூட, ஒரு ஊழியரின் வேலை இழப்பு பலன்களை இழக்க நேரிடும். இதனால் காப்பீடு திட்டம் உறுதியளிக்கும் மாதாந்திர பண ஆதரவை இழக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
சையத் இது பற்றி கூறுகையில் “எனக்கு நிறுவனம் அனுப்பிய கடிதத்தில் ’Termination’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது, அதேசமயம் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்திற்கு (MoHRE) வேலைவாய்ப்பு ரத்து கடிதத்தில் நான் ராஜினாமா (resigned) செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது” என கூறியுள்ளார்.
இந்த முரண்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்குப் போராடி, சையத் தனது நிறுவனத்திற்கும் துபாய் இன்சூரன்ஸால் நிர்வகிக்கப்படும் ILOE க்கும் இடையே தொடர்ந்து அலைந்து சென்று இதற்கான தீர்வு காண முயன்றிருக்கிறார். இந்த விஷயத்தை வேலை பார்த்த நிறுவனத்திற்கு சையத் கொண்டு சென்றபோது நிறுவனம் தங்கள் கவனக்குறைவான தவறை ஒப்புக்கொண்டு சையத்துக்கு உதவ முயன்று அமைச்சகத்திற்கு இது குறித்த மின்னஞ்சலை அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.
அமைச்சகம் விடுத்த அறிவுறுத்தல்
இது போன்ற சம்பவங்களையடுத்து முறைகேடுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போது துல்லியமான தரவை வழங்குமாறு தனியார் துறை நிறுவனங்களை MoHRE வலியுறுத்தியுள்ளது. மேலும் “MoHRE ஒழுங்கின்மைகளைக் கண்டறிந்து, துல்லியமான தகவலை வழங்கத் தவறிய முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். இது, வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்திலிருந்து அதிகபட்ச பலனைப் பெறுவதற்கு ஊழியர்களுக்கு உதவுகிறது” என கூறியுள்ளது.
அத்துடன் “பணியை நிறுத்துவதற்கான உண்மையான காரணத்திற்கும் அமைச்சகத்திற்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், தவறான தகவல்களை வழங்கியது நிறுவனம் என்று கருதப்படும், இது நிறுவனத்தை விசாரணைக்கு வழிவகுக்கும் மற்றும் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும்” என்று அமைச்சகம் கூறியுள்ளது. மீறல் உறுதிப்படுத்தப்பட்டால், தண்டனை நடைமுறைகளை முடிக்க நிறுவனம் பொது வழக்கறிஞருக்கு பரிந்துரைக்கப்படுவதற்கு முன்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலையின்மை காப்பீடு திட்டம் முதன் முதலாக கடந்த 2023ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் நபர் குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குப் பங்களித்திருக்க வேண்டும். “மேலும், பணியாளர்கள் தங்கள் விசா ரத்து (cancel) செய்யப்பட்டிருந்து அதற்கான காரணம் அவர்கள் இல்லை என்று இருந்தால் மட்டுமே பலனைக் கோர முடியும். எனவே, முதலாளியும் பணியாளரும் இணக்கமான தகவலை வழங்குவது முக்கியம். இந்த நிலை தனிநபர் காப்பீட்டு பலனைக் கோருவதற்கு உதவும்”
சையத் விஷயத்தை பொறுத்தவரை, அது பல்வேறு அதிகாரிகளுடன் பல அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வழிவகுத்தாலும், 30-நாள் காலக்கெடு முடிவடைய நெருங்கிய நிலையில், சையத் இறுதியாக ILOE இலிருந்து வரவேற்கத்தக்க செய்தியைப் பெற்றிருக்கிறார். அதாவது அவரது வழக்கை கவனமாக மதிப்பாய்வு செய்த பிறகு, அவர்கள் உரிமைகோரலுக்கு ஒப்புதல் அளித்து மெயில் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்செயலான பிழைகளை எவ்வாறு தீர்ப்பது?
ஒரு தொழிலாளியின் பணிநீக்கத்திற்கான காரணத்தை உள்ளிடுவதில் தற்செயலான பிழைகள் ஏற்பட்டால், அந்தத் தொழிலாளி வேலையின்மை இழப்பீட்டைப் பெறுவதைத் தடுக்கும் பட்சத்தில், தொழிலாளி ஒரு தொழிலாளர் புகாரைத் தாக்கல் செய்யவோ அல்லது ரத்துசெய்த ஆவணத்தைத் திருத்த தொழில்நுட்ப ஆதரவைக் கோரவோ தேவையில்லை என்று MoHRE தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் “இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பணிநீக்கக் கடிதத்தை (termination letter) வழங்கினால் போதுமானது, அந்த கடிதமானது நிறுவனமே தொழிலாளியை வேலயை விட்டு நீக்கியது என்று தெளிவாகக் குறிப்பிடும் மற்றும் வேலையின்மை காப்பீட்டுத் திட்ட போர்டல் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட இழப்பீட்டு கோரிக்கையுடன் அந்தக் கடிதத்தை இணைக்கவும்” என கூறப்பட்டுள்ளது
அத்துடன் செயல்முறை தடையற்றதாக இருக்க, முதலாளிகள் ஒவ்வொரு பணியாளருக்கும் விசா ரத்து செய்வதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கு முன் ILOE உடன் ஆலோசிக்கவும், இழப்பீடு கோரும்போது பணியாளர் பாதிக்கப்படமாட்டார் என்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டுக் குழு வலைத்தளமான www.iloe.ae இல் கிடைக்கும், அல்லது சந்தா மற்றும் இழப்பீடு தொடர்பான ஏதேனும் நடைமுறைகள் குறித்து விசாரிக்க 600599555 என்ற கால் சென்டரைத் தொடர்புகொள்வதன் மூலம் இந்தத் திட்டத்தைப் பற்றிய தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை ஆய்வு செய்யுமாறு முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களை அமைச்சகம் வலியுறுத்தியது. இறுதியாக, தொழிலாளி ILOE இலிருந்து காப்பீடு கோரும் சவால்களை எதிர்கொண்டால், தொழிலாளி அமைச்சகத்திடம் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம், அது வழக்கை விசாரித்து ஒரு தீர்மானத்தை அமல்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
நன்மைகள் மற்றும் தகுதி
வேலையின்மை காப்பீடு திட்டம் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது: முதல் பிரிவில் 16,000 அல்லது அதற்கும் குறைவான அடிப்படைச் சம்பளம் உள்ளவர்களுக்கு, காப்பீட்டு பிரீமியம் மாதத்திற்கு 5 திர்ஹம்ஸ் ஆகவும், அதிகபட்ச மாதாந்திர இழப்பீடு 10,000 திர்ஹம்ஸ் ஆகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரிவில் அடிப்படை சம்பளம் 16,000 திர்ஹம்ஸை விட அதிகமாக உள்ளது, அங்கு காப்பீட்டு பிரீமியம் மாதத்திற்கு 10 திர்ஹம்ஸ் மற்றும் மாதாந்திர இழப்பீடு 20,000 ஆக உள்ளது. ஊழியர் குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு திட்டத்தில் சந்தா செலுத்தியிருந்தால் காப்பீட்டு இழப்பீடு கோரப்படலாம். கோரிக்கை சமர்ப்பித்த இரண்டு வாரங்களுக்குள் செயல்படுத்தப்படும்.
இருப்பினும் அவர் விசாவை ரத்து செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினாலோ அல்லது புதிய வேலைக்குச் சென்றாலோ அவருக்கு இழப்பீடு கிடைக்காது. ஒவ்வொரு உரிமைகோரலுக்கும் வேலையின்மை தேதியிலிருந்து அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel