அமீரகத்தில் சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி.. வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின் நேரத்தை குறைத்த அமீரக அரசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதால், நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெறும் வெள்ளிக்கிழமை பிரசங்கங்களை (ஜும்மா உரை மற்றும் தொழுகை) 10 நிமிடங்களாக குறைக்குமாறு இமாம்களை அமீரக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் சிறப்புத் தொழுகையின் போது, மசூதிகள் விரைவாக நிரம்பி வழிவதால், பல வழிபாட்டாளர்கள் கடும் வெயிலில் திறந்த வெளியில் தொழுகையில் ஈடுபட வேண்டி உள்ளது. எனவே இந்த நடவடிக்கை வழிபாட்டாளர்களை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஜும்மா உரையானது உரையை பொறுத்து 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை எடுக்கும். அதைத் தொடர்ந்து இரண்டு ரக்கத்துகள் கொண்ட கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறும். இந்த நேரங்களில் வெளியில் அமர்ந்திருப்பவர்கள் நேரடியாக வெயிலின் பாதிப்புக்கு உள்ளாவதால் அமீரக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சமூக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான அமீரக அரசின் 10 நிமிட ஜும்மா உரை நடைமுறைகளுக்கு இணங்குவதாக அமீரகத்தின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் நன்கொடைகளின் பொது ஆணையமும் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த உத்தரவானது ஜூன் 28 வெள்ளிக்கிழமை முதல் அக்டோபர் மாதம் இறுதி வரை நடைமுறையில் இருக்கும்.
ஐக்கிய அரபு அமீரகம் தவிர சவூதி அரேபியாவும் கடந்த வாரம் இதேபோன்ற கொள்கையை வெளியிட்டது. அதாவது இரண்டு புனித மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிரசங்கங்கள் மற்றும் பிரார்த்தனைகளை கோடை காலம் முழுவதும் 15 நிமிடங்களாக சுருக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel