துபாய்: பயண நேரத்தை 60% குறைக்கும் E311-சாலையின் விரிவாக்க திட்டம் நிறைவு..!! 4 நிமிடங்களாக குறையும் பயண நேரம்..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) போக்குவரத்தை மேம்படுத்தவும் குடியிருப்பாளர்களுக்கு எளிதான மற்றும் விரைவான சாலை பயணத்தை வழங்கவும் துபாயில் இருக்கக்கூடிய பல்வேறு சாலைகளில் மேம்பாட்டு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் துபாயின் முக்கிய சாலைகளில் ஒன்றான E311 இல் (ஷேக் முகமது பின் சையத் சாலை) போக்குவரத்து மேம்பாடுகளை தற்பொழது RTA நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டின் மூலம், பயண நேரம் பாதிக்கு மேல் குறையும் என கூறப்பட்டுள்ளது.
இது நிறைவு செய்யப்பட்டதையடுத்து ஷேக் முகமது பின் சயீத் சாலையில் இருந்து ரபாத் ஸ்ட்ரீட் வரை வெளியேறும் (exit) திறன் 50 சதவீதம் அதிகரித்து, ஒரு மணி நேரத்திற்கு 3,000 வாகனங்களில் இருந்து 4,500 வாகனங்களாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஷேக் முகமது பின் சயீத் சாலையிலிருந்து ரபாத் ஸ்ட்ரீட் வரை பிஸ்னஸ் பே க்ராஸ்ஸிங்கை நோக்கிய பயண நேரத்தை 10 நிமிடங்களில் இருந்து 4 நிமிடங்களாகக் குறைத்து அதாவது பயண நேரத்தை, 60 சதவீதம் குறைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ரபாத் ஸ்ட்ரீட்டிற்கு செல்லும் எக்ஸிட் 55 இப்போது 600 மீட்டர் விரிவடைந்துள்ளது என்றும், போக்குவரத்து ஒன்றுடன் ஒன்று தூரம் அதிகரிக்கப்பட்டு புதிய பாதை சேர்க்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதைகளின் (lane) எண்ணிக்கையானது மூன்றாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஷேக் முகமது பின் சயீத் சாலையிலிருந்து ரபாத் ஸ்ட்ரீட் வரையிலான இந்த பாதையில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து விரிவாக்கம் துபாய் முழுவதும் 45 இடங்களை உள்ளடக்கிய 2024 ஆம் ஆண்டில் RTA இன் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாகும். இத்தகைய மேம்பாடுகள் துபாயின் நிலையான வளர்ச்சியை ஆதரி்த்து குடியிருப்பாளர்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதோடு, துபாயை வாழ்வதற்கு சிறந்த நகரமாக தரவரிசைப்படுத்துகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel