அமீரகத்தில் இந்திய தொழிலாளர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து.. பலர் காயம்..!!

ஷார்ஜாவில் உள்ள கொர்ஃபக்கான் பகுதியில் கட்டுமான தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தை ஷார்ஜா காவல்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்த செய்தியில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று காவல்துறை குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியதுடன் “சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், கொர்ஃபக்கானில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதைக் கையாண்டு வருகிறோம். இது குறித்த கூடுதல் தகவல்களை நாங்கள் பின்னர் உங்களுக்கு வழங்குவோம். மேலும் அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறுமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
சமூக ஆர்வலர்களின் கூற்றுப்படி, இந்த சம்பவம் நகரத்திற்குள் நுழைவதற்கு சற்று முன்பு ஒரு ரவுண்டானாவில் நடந்தது என கூறப்பட்டுள்ளது. கேரள முஸ்லிம் கலாச்சார மையத்தின் (KMCC) சமூக சேவகர் சலீம் கூறுகையில், “விபத்துள்ளான பேருந்தில் பயணித்த இந்தியர்கள் அனைவரும், அஜ்மானில் தலைமையகத்தைக் கொண்ட ஒரு நிறுவனத்தின் தொழிலாளர்கள். ஆண்கள் தங்கள் விடுமுறை நாளில் நிறுவனத்தின் தலைமையகத்தைப் பார்வையிடவும், அந்தப் பகுதியில் உணவுப் பொருட்களை வாங்கவும் அஜ்மானுக்குச் சென்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
பின் அவர்கள் இரவு 8 மணிக்குப் பிறகு தங்களின் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தனர் சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சலீம் கூறியுள்ளர். விபத்து ஏற்பட்டதையடுத்து கொர்ஃபக்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களைப் பார்வையிட்ட சலீம், அவர்களில் பலர் அதிர்ச்சியில் இருப்பதாகவும், விவரங்களில் தெளிவாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel