ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் சமீபத்தில், சிறைத்தண்டனை அனுபவித்து வந்த சுமார் 500க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கருணை மன்னிப்பு அளித்துள்ளது. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கைதிகளை மன்னிப்பதற்கான நாட்டின் வருடாந்திர பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள், ரமலானை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாத இறுதியில், 1,295 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டிருந்தார். மேலும், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் 1,518 கைதிகளுக்கு கருணை மன்னிப்பு வழங்கினார். இதனையொட்டி 500க்கும் மேற்பட்ட இந்திய கைதிகளுக்கு விடுதலை கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் நாட்டில் கைதிகளை விடுவிப்பதைத் தாண்டி, அவர்களின் நிதிக் கடமைகளைத் தீர்ப்பதற்கும், அவர்கள் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைப்பதை எளிதாக்குவதற்கும் ஐக்கிய அரபு அமீரகம் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அமீரக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் இருவரின் நிதி சுமைகளையும் குறைக்கவும், வீடுகளுக்குள் ஸ்திரத்தன்மையை வளர்க்கவும், நிதி நெருக்கடி இல்லாமல் அவர்கள் புதிதாக வாழ்க்கையைத் தொடங்குவதை உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் செயல், நீதி, இரக்கம் மற்றும் இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel