துபாயில் வாகன ஓட்டிகள் கடந்த 2025 ஆம் ஆண்டில் சாலைகளில் அதிக மணிநேரம் செலவிட்டிருப்பதாக புதிய கருத்து கணிப்பு வெறிவந்துள்ளது. அதன்படி, துபாயில் 10 கிலோமீட்டர் பயணத்திற்கான சராசரி பயண நேரம் 2024 இல் இருந்த 13.7 நிமிடங்களிலிருந்து 2025 இல் 19.1 நிமிடங்களாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த அதிகரிப்பிற்கு துபாயில் அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கமே காரணம் கனவும் அந்த தெரிவிக்கிறது.
இதேபோல், நகரத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்துக்கு மத்தியில், 2025 இல் நெரிசல் நேரத்தில் சராசரி வேகம் மணிக்கு 26.3 கிலோமீட்டராகவும், 2024 ஐ விட 1 கிமீ குறைவாகவும் இருந்துள்ளது. மக்கள் தொகை அதிகரித்து, 2025 ஆம் ஆண்டில் முதல் முறையாக நான்கு மில்லியனைத் தாண்டியதால், சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
துபாயின் டோல் கேட் ஆபரேட்டர் சாலிக்கின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் 4.65 மில்லியன் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டதாகவும், இது இரண்டாவது காலாண்டின் இறுதியில் 4.56 மில்லியனாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை பிரதிபலிப்பதாகவும் சாலிக் கூறியுள்ளது.
துபாயின் அதிகரித்து வரும் போக்குவரத்தை சமாளிக்க உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பில்லியன் கணக்கான திர்ஹம்களை முதலீடு செய்து வருகிறது.
சமீபத்திய சாலை மேம்பாட்டுத் திட்டங்களில், உலக வர்த்தக மைய ரவுண்டானாவில் இரண்டு பாலங்கள் திறக்கப்பட்டதுடன், அல் ஹெஸ்ஸா தெருவில் கூடுதல் பாதைகளும் சேர்க்கப்பட்டது. துபாய் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1 க்கு செல்லும் பாலம் விரிவாக்கம் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. மேலும் எமிரேட்ஸ் சாலையின் ஒரு முக்கிய பகுதி கடந்த ஆண்டு நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பான நாள் மற்றும் நேரம்
டாம்டாம் நடத்திய இந்த போக்குவரத்து குறியீட்டின்படி, துபாயில் வாகன ஓட்டிகள் 2025 ஆம் ஆண்டில் போக்குவரத்து நெரிசலில் 72 மணிநேரத்தை இழந்துள்ளனர், இது 3 நாட்கள் மற்றும் 50 நிமிடங்களுக்கு சமம். அத்துடன் வாகன ஓட்டிகள் முந்தைய ஆண்டில் சாலை நெரிசலில் இழந்த நேரத்தை விட 6.23 மணிநேரம் அதிகமாகும்.
டாம்டாமின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு வாகன ஓட்டிகளின் மிகவும் பரபரப்பான நாளாக நவம்பர் 11 ம் தேதி இருந்துள்ளது. அப்போது சராசரி நெரிசல் அளவு நாள் முழுவதும் 73 சதவீதமாகவும், மாலை 5 மணிக்கு 168 சதவீதமாகவும் இருந்ததாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதாவது நவம்பர் 11 அன்று துபாய் வாகன ஓட்டிகள் 4 கிலோமீட்டர் பயணம் செய்ய சராசரியாக 15 நிமிடங்கள் எடுத்துள்ளனர்.
அத்துடன், துபாய் வாகன ஓட்டிகள் காலையில் பயணிக்கும் அதே தூரத்தை மாலையில் கடப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காலையில் 10 கி.மீ தூரம் பயணிக்க வாகன ஓட்டிகள் சராசரியாக 18.4 நிமிடங்கள் எடுக்கும் நிலையில், மாலையில் அதே தூரத்தை கடக்க 26.3 நிமிடங்கள் எடுப்பதாக தெரிகிறது. இதன் விளைவாக, சராசரி வேகம் காலையில் மணிக்கு 32.1 கி.மீ. இலிருந்து, மாலை நெரிசல் நேரத்தில் 22.6 கி.மீ. ஆகக் குறைவதாக கூறப்பட்டுள்ளது.