பாதசாரிகளுக்கு வாகனங்கள் செல்லக்கூடிய சாலையை கடப்பது ஒரு விரைவான குறுக்குவழியாகத் தோன்றலாம். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலையை கடப்பது தண்டனைக்குறிய விதிமீறலாகும். அவ்வாறு சாலையை கடக்கும் போது பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படும். ஆனால் அமீரகத்தில் இது ஒரு கடுமையான சட்டரீதியான ஆபத்தாகவும், அபாயகரமான ஒன்றாகவும் மாறிவருகிறது.
சமீபத்தில் வெளியான தரவுகளின் படி, ஜனவரி 2024-ல் மட்டும், கிட்டத்தட்ட 44,000 பேர் சாலையைக் கடக்கும்போது விதிகளை மீறியதற்காகப் பிடிபட்டுள்ளனர். மேலும் விதிகளை மீறி சாலையை கடக்கும் போது வாகனங்கள் மோதிய விபத்துகளில் எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் சாலைகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு குறித்த கவலையை எடுத்துக்காட்டுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆகவே, இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, ஐக்கிய அரபு அமீரகம் 2024-ஆம் ஆண்டின் கூட்டாட்சி ஆணை-சட்டம் எண் 14-இன் கீழ் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியது. இது மார்ச் 29, 2025 அன்று முதல் நடைமுறைக்கும் வந்தது. எனினும் இது போன்று சாலையை கடப்பதற்கு புதிய சட்டத்தின் கீழ் 10,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை.
புதிய போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகள் இதோ:
- அனுமதிக்கப்படாத பகுதிகளில் இருந்து சாலையைக் கடந்தால் 400 திர்ஹம்ஸ் அபராதம்
- சாலையின் குறுக்கே ஒழுங்கற்ற முறையில் செல்வதால் விபத்து ஏற்பட்டால் 5,000 திர்ஹம்ஸ் –10,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்
- மணிக்கு 80 கி.மீ அல்லது அதற்கு மேற்பட்ட வேக வரம்பு கொண்ட சாலைகளில், அனுமதிக்கப்படாத இடங்களில் சட்டவிரோதமாக கடப்பவர்களுக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனையும், குறைந்தது 10,000 திர்ஹாம் அபராதமும் விதிக்கப்படும். மேலும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்கள் உரிமையியல் அல்லது குற்றவியல் ரீதியாகப் பொறுப்பேற்க நேரிடும்.
இந்தச் சட்டம் பாதசாரிகளுக்கு மட்டுமல்லாமல், சைக்கிள்கள், இ-ஸ்கூட்டர்கள் மற்றும் பிற தனிநபர் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தில் நியமிக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே சாலையைக் கடப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக, ஓட்டுநர்கள் எதிர்வினையாற்றக் குறைந்த நேரமே உள்ள பரபரப்பான அல்லது அதிவேகச் சாலைகளில் இது அடிக்கடி நிகழும். இதனால் ஏற்படும் ஒரு சிறிய தவறு கூட கடுமையான காயங்கள் அல்லது உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, சாலைகளைப் பயன்படுத்தும் போது பாதசாரிகள் பாதுகாப்பாக இருக்க உதவும் வகையில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பின்வரும் பாதுகாப்புக் குறிப்புகளைப் பகிர்ந்துள்ளது:
- பாதசாரி மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அல்லது பாதசாரிகள் கடக்கும் இடங்களைப் பயன்படுத்துங்கள்
- சிக்னல் பச்சையாக இருக்கும்போது மட்டுமே சாலையைக் கடக்கவும்
- சாலையைக் கடக்கும்போது உங்கள் மொபைல் அல்லது ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
- சாலையின் இருபுறமும் பார்த்து விழிப்புடன் இருங்கள்
- சாலையில் இறங்குவதற்கு முன் ஓட்டுநர்களுடன் கண் தொடர்பு கொள்ளுங்கள்
- இரவில் ஒளிரும் ஆடைகளை அணியுங்கள்
- நடைபாதைகள் இல்லாத இடங்களில், வரும் வாகனங்களைப் பார்க்க, எதிர்திசையில் வரும் போக்குவரத்தை எதிர்கொண்டபடி நடக்கவும்.
ஆகவே, நியமிக்கப்படாத இடங்களில் சாலையைக் கடப்பது இனி ஒரு சிறிய குற்றம் மட்டுமல்ல, அது இப்போது கடுமையான அபராதங்கள், சிறைத்தண்டனை மற்றும் கடுமையான சட்ட விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு முறையும், பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க சில கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel