ADVERTISEMENT

எரிபொருள் விலை உயர்வால் சர்வதேச விமானச் சேவைகளை நிறுத்தியதா ஏர் இந்தியா..?? விமான நிறுவனம் அளித்துள்ள விளக்கம்!!

Published: 13 May 2026, 4:00 PM |
Updated: 13 May 2026, 4:00 PM |
Posted By: Menaka

ஈரானுடன் தொடர்புடைய மோதல் காரணமாக எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு அனைத்து சர்வதேச விமானச் சேவைகளையும் ஏர் இந்தியா நிறுத்திவிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த செய்திகளை ஏர் இந்தியா மறுத்துள்ளதுடன், சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்தப் பதிவுகள் “பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை” என்றும் கூறியுள்ளது.

ADVERTISEMENT

அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் பற்றாக்குறை காரணமாக, விமான நிறுவனம் ஜூலை மாதம் வரை வெளிநாட்டுச் சேவைகளை நிறுத்திவிட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து இந்த விளக்கம் வந்துள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “ஏர் இந்தியா அனைத்து சர்வதேச விமானச் சேவைகளையும் ரத்து செய்துவிட்டதாகக் கூறி, சில தளங்களில் பரவி வரும் தீய நோக்கமுள்ள மற்றும் புனையப்பட்ட கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை,” என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், முழுமையான நிறுத்தம் என்பதை மறுத்தாலும், அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் நீண்ட விமானப் பயண வழிகள் செயல்பாடுகளைத் தொடர்ந்து பாதித்து வருவதால், ஜூன் மாதம் முதல் பல சர்வதேச சேவைகளைத் தற்காலிகமாகக் குறைத்துள்ளதை விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

அறிக்கைகளின்படி, செயல்பாட்டு மாற்றங்களின் ஒரு பகுதியாக, டெல்லியிலிருந்து சிகாகோ, நெவார்க், சிங்கப்பூர் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட இடங்களுக்கான விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மேலும், சான் பிரான்சிஸ்கோ, பாரிஸ் மற்றும் டொராண்டோவுக்கான சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது, இதனால் அதன் வலையமைப்பு முழுவதும் கிட்டத்தட்ட 100 தினசரி விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் ஏர் இந்தியா தலைமை நிர்வாகி கேம்ப்பெல் வில்சன் இது குறித்து பேசிய போது, அதிகரித்த எரிபொருள் விலைகள் மற்றும் நிலவும் புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக, விமான நிறுவனம் சில சர்வதேச சேவைகளைத் தொடர்ந்து மாற்றியமைக்கும் என்று கூறியிருந்தார்.

குறிப்பாக, பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து இந்திய விமான நிறுவனங்கள் கூடுதல் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன. இதனால், மேற்கு நோக்கிச் செல்லும் பல விமானங்கள் நீண்ட மாற்று வழிகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளன.

இதன் விளைவாக, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கான விமானங்கள் தற்போது நீட்டிக்கப்பட்ட பாதைகளில் இயக்கப்படுவதால், எரிபொருள் நுகர்வு, பணியாளர் செலவுகள் மற்றும் மொத்த பயண நேரம் ஆகியவை அதிகரிக்கின்றன. நீண்ட பயணங்கள் காரணமாக, வட அமெரிக்கா செல்லும் சில விமானங்கள் வியன்னா மற்றும் ஸ்டாக்ஹோம் போன்ற நகரங்களில் தொழில்நுட்ப நிறுத்தங்களை மேற்கொள்ளவும் தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில், மேலும் நெருக்கடியை அதிகரிக்கும் விதமாக உலகளாவிய ஜெட் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்ததால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் ஒரு பேரலுக்கு 99.40 டாலர் ஆக இருந்த சராசரி ஜெட் எரிபொருள் விலை, மே 8, 2026-ல் முடிவடைந்த வாரத்தில் ஒரு பேரலுக்கு 162.89 டாலர் ஆக உயர்ந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதனால், விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் மிகப்பெரிய செலவுகளில் ஒன்றாகத் தொடர்கிறது. குறிப்பாக நீண்ட தூர சர்வதேச விமான நிறுவனங்களுக்கு, இது இயக்கச் செலவுகளில் 40 சதவீதம் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே அந்த விமான நிறுவனம், டாடா குழுமத்தின் கீழ் ஒரு விரிவான மறுசீரமைப்புத் திட்டத்தையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த விமான நிறுவனம் தனது விருப்பச் செலவுகளைக் குறைத்துள்ளதாகவும், உள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகள் மற்றும் கொள்கை மீறல்கள் காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இத்தகைய இக்கட்டான நிலை தொடரும் பட்சத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உட்பட, ஏர் இந்தியா குழுமம் மார்ச் 2026-இல் முடிவடையும் நிதியாண்டில் 22,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பைச் சந்திக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel