ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் சாலை தெளிவாக உள்ளதா என்பதை உறுதி செய்யாமல் ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலைக்குள் நுழைதல் ஆகியவற்றால் எமிரேட் சாலைகளில் நிகழ்ந்த இரண்டு கோரமான விபத்துகளின் காணொளியை காவல்துறை பகிர்ந்துள்ளது.
அபுதாபி காவல்துறையானது இன்று (மே 1, வெள்ளிக்கிழமை) சாலையில் நுழைவதற்கு முன் போக்குவரத்தை ஒழுங்காக கவனித்து உறுதி செய்யுமாறு காவல்துறை ஓட்டுநர்களைக் கேட்டுக்கொண்டதுடன், எதிர்பாராத சாலை விபத்துகளைத் தவிர்க்க, வாகனம் ஓட்டும்போது சாலையைத் தவிர வேறு எதிலும் கவனம் சிதறாமல் இருக்குமாறு வலியுறுத்தி உள்ளது.
இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், விழிப்புணர்வைப் பரப்பவும் உதவும் நோக்கில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாகன ஓட்டிகள் அடிக்கடி செய்யும் தவறுகளால் விபத்துகள் ஏற்படுவதை எடுத்துக்காட்டும் சம்பவங்களின் காணொளிகளை காவல்துறை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்துச் சட்டங்களின்படி, இத்தகைய பொறுப்பற்ற நடத்தைகளுக்கான அபராதங்கள் மற்றும் தண்டனைகள் குறித்தும் அது பொதுமக்களுக்கு நினைவூட்டி வருகிறது.
என்ன நடந்தது?
தற்பொழுது காவல்துறை வெளியிட்ட வீடியோவில் முதல் விபத்து, ஒரு ஓட்டுநர், சாலையோர நிறுத்துமிடத்திலிருந்து பிரதான சாலைக்கு வந்தபோது இடதுபுறம் பின்னால் இருந்து அதிவேகமாக வந்த வாகனத்தைக் கவனிக்காமல் சென்றதால் விபத்து நிகழ்ந்தது. அவர் அந்த வாகனத்தின் மீது மோதிவிட்டுத் தன் வழியில் தொடர்ந்து சென்றார். இருப்பினும், அதிவேகமாக வந்த கார் சேதமடைந்ததால் தனது பாதையிலிருந்து விலகி, இடதுபுறப் பாதையில் இருந்த மூன்றாவது வாகனத்தின் மீது மோதி, இறுதியாக சாலையின் நடுவில் நின்றது. இந்த விபத்தைத் தொடர்ந்து போக்குவரத்தும் முற்றிலுமாக ஸ்தம்பித்தது.
மற்றொரு சம்பவத்தில் ஓட்டுநரின் கவனசிதரலால், அவரின் வாகனத்தைக் கவிழ்த்துவிட்டு, சாலையோரத் தடுப்பில் மோதியதால், தனது உயிருக்கும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தினார்.
#فيديو | بثت #شرطة_أبوظبي بالتعاون مع مركز المتابعة والتحكم وضمن مبادرة "لكم التعليق" فيديو لحوادث بسبب دخول الطريق دون التأكد من خلوه من المركبات والانشغال بغير الطريق.
— شرطة أبوظبي (@ADPoliceHQ) May 1, 2026
ودعت مديرية المرور والدوريات الأمنية بشرطة أبوظبي السائقين إلى ضرورة التأكد من خلو الطريق قبل دخوله، بما… pic.twitter.com/0mecGjW8tb
தண்டனைகள், அபராதங்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில், அனைத்து சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. விபத்துக்களைக் குறைக்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்ட தெளிவான விதிகளுடன், பொறுப்பான ஓட்டுதலுக்கு அதிகாரிகள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
மேற்கண்டவாறு சாலை தெளிவாக உள்ளதா என்பதை உறுதி செய்யாமல் சாலைக்குள் நுழையும் ஓட்டுநர்களுக்கு 400 திர்ஹம் அபராதமும் நான்கு போக்குவரத்துப் புள்ளிகளும் விதிக்கப்படும்.
அதே நேரத்தில் கவனச்சிதறலுடன் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 800 திர்ஹம் அபராதமும் நான்கு போக்குவரத்துப் புள்ளிகளும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.