இஸ்லாமிய மாதமான துல் ஹஜ்ஜின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சவுதி அரேபியாவில் காணப்பட்டதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. எனவே இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் கடைசி மாதமான துல் ஹஜ், நாளை மே 18 திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.
அதன்படி, வரும் மே 26, செவ்வாய்கிழமை அரஃபா நாள் தினமாகவும், அதற்கு அடுத்த நாள் மே 27, புதன் கிழமை அன்று ஈத் அல் அதா பெருநாள் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் ஐக்கிய அரபு அமீரகத்திலும் இஸ்லாமிய ஆண்டின் இறுதி மாதமான துல் ஹஜ் மாத பிறை இன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமீரகத்திலும் மே 26 அன்று அரஃபா தினமாகவும் மே 27 ஈத் அல் அதாவும் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர்களின் இரண்டு பெரிய பண்டிகைகளில் ஒன்றான ஈத் அல் அதா என்பது, இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபி தனது மகன் இஸ்மாயிலை இறைவனின் கட்டளைப்படி தியாகம் செய்ய விரும்பியதை நினைவுபடுத்தும் தியாக திருநாளாக உலக முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது.
சவூதி, அமீரகம் போன்றே ஓமான் உள்ளிட்ட மற்ற வளைகுடா நாடுகளும் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.