ஷார்ஜா முனிசிபாலிட்டியானது, அல் கான் பகுதியில் சுமார் 5,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய பொது பசுமை வெளியான அல் கான் பூங்காவை, ஈத் அல் அதா கொண்டாட்டங்களுக்குச் சரியான நேரத்தில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், கடந்த ஏப்ரல் 30 அன்று தொடங்கப்பட்ட பூங்காவின் கட்டுமானப் பணிகள் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் முடிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, நகராட்சியின் விரைவுபடுத்தப்பட்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் இதுவும் ஒன்று என அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
எமிரேட் முழுவதும் பொதுப் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை விரிவுபடுத்தி மேம்படுத்த வேண்டும் என்ற சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இந்தப் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்திற்கு ஏற்ற வசதிகள்
அல் கானில் அமைந்துள்ள இந்தப் புதிய பூங்காவில், குடும்பங்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பல வசதிகள் உள்ளன, அவற்றுள்:
- ஒரு கால்பந்து மைதானம்
- குழந்தைகள் விளையாட்டுப் பகுதி
- அமரும் இடங்கள்
- உட்புற நடைபாதைகள்
- விளக்கு அமைப்புகள்
- சேவை வசதிகள்
அதுமட்டுமில்லாமல், ஓய்வான மற்றும் கண்ணைக் கவரும் வெளிப்புறச் சூழலை உருவாக்கும் வகையில், பூங்காவின் சுமார் 3,000 சதுர மீட்டர் பகுதி, அழகுபடுத்தப்பட்ட பசுமையான புல்வெளியால் மூடப்பட்டுள்ளது.
மேலும், ஈத் பண்டிகைக்கு முன்னதாக இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதற்காக, பொறியியல் குழுக்கள் விரிவான திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, தொழிலாளர்களையும் உபகரணங்களையும் விரைவாகத் திரட்டியதாக ஷார்ஜா முனிசிபாலிட்டி கூறியுள்ளது. கூடுதலாக, இந்த மேம்பாட்டில் நீர்ப்பாசன அமைப்புகள், நில அழகுபடுத்தும் பணிகள் மற்றும் பசுமை உள்கட்டமைப்பு மேம்பாடுகள் ஆகியவை அடங்கும்.
இவ்வாறு குடியிருப்புப் பகுதிகளில் பூங்காக்களைத் தொடர்ந்து விரிவுபடுத்துவது, எமிரேட்டின் நகர்ப்புற நிலப்பரப்பை வலுப்படுத்தவும், பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், குடும்பங்களுக்கு ஆரோக்கியமான வெளிப்புற இடங்களை வழங்கவும் வகுக்கப்பட்ட ஒரு பரந்த உத்தியின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், உயர் பொறியியல் மற்றும் சேவைத் தரங்களுக்கு ஏற்ப நவீன பொது வசதிகளை வழங்குவதில் நகராட்சியின் அர்ப்பணிப்பை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், குடியிருப்பாளர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய பொழுதுபோக்கு இடங்களை உருவாக்கும் வகையில், அமீரகம் முழுவதும் உள்ள பொதுப் பூங்காக்களில் நவீன நில வடிவமைப்பு, மரங்கள், புதர்கள் மற்றும் மலர் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக முனிசிபாலிட்டி மேலும் கூறியது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel