துபாயின் முக்கிய பொழுதுபோக்கு இடமான குளோபல் வில்லேஜ் பார்வையாளர்களுக்காக ஒரு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. வரும் மே 10 அன்று மூடப்படவுள்ள இந்த பொழுதுபோக்கு மையம், வரம்பற்ற கார்னிவல் சவாரிகளை வெறும் 99 திர்ஹாம்களுக்கு வழங்குகிறது.
இதன் மூலம் பார்வையாளர்கள், வானில் பறக்கும் சிலிர்ப்பூட்டும் சவாரிகள் முதல் குடும்பத்தினருக்குப் பிடித்தமானவை வரை 31 சவாரிகளை வரம்பற்ற முறையில் அனுபவிக்கலாம். அனைத்து வயதினருக்கும் ஏற்ற இந்த சிறப்புச் சலுகை, நாள் முடியும் வரை நீங்கள் விரும்பும் அளவுக்கு சவாரி செய்யும் சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது. அதே போல் சீசன் 30 முடியும் வரை இந்தச் சலுகை தினமும் கிடைக்கும்.
பல்வேறு நாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அரங்குகள், உணவுக் கடைகள் நிறைந்த தெருக்கள் மற்றும் சிலிர்ப்பூட்டும் சவாரிகளைக் கொண்ட கார்னிவல் பகுதி ஆகியவற்றைக் கொண்ட இந்த பிரபலமான தீம் பார்க், பெரும்பாலும் திறந்தவெளிப் பகுதியாகும். இது அதிக வெப்பம் காரணமாக கோடை மாதங்களில் மூடப்பட்டிருக்கும்.
தற்போதைய நடப்பு சீசன் வாணவேடிக்கை, ட்ரோன் நிகழ்ச்சிகள் மற்றும் சில புதிய ஈர்ப்புகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம் முதல் புத்தாண்டு வரை ஒவ்வொரு பண்டிகையும் இந்தப் பூங்காவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இருப்பினும், ஈரான் போர் தொடங்கிய பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளோபல் வில்லேஜ் 51 நாட்கள் மூடப்பட்டிருந்தது. இந்த பொழுதுபோக்கு மையம் ஏப்ரல் 20 அன்று மீண்டும் திறக்கப்பட்டு, தினமும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.