அபுதாபியில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், எமிரேட்டின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (AD Mobility), வரும் மே 15, வெள்ளிக்கிழமை முதல் குறிப்பிட்ட சில சாலைகளில் டெலிவரி மோட்டார் சைக்கிள்களுக்குத் தடை விதிக்கப்படும் என இன்று (மே 8, 2026, வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில் “இந்த நடவடிக்கை, சாலைப் பாதுகாப்புத் தரத்தை உயர்த்துவதையும், முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதையும், அனைத்து சாலைப் பயனாளர்களுக்கும் பாதுகாப்பான போக்குவரத்துச் சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த அமைப்பின் ஒரு பகுதியாகும்” என்று கூறியுள்ளது.
அதன்படி, அபுதாபியில் வரவிருக்கும் இந்தத் தடையில் பின்வரும் சாலைகள் அடங்கும்:
- மணிக்கு 120 கிலோமீட்டர் அல்லது அதற்கும் அதிகமான வேக வரம்பு கொண்ட சாலைகள்
- ஷேக் சையத் பிரிட்ஜில் இருந்து ஷேக் சையத் சுரங்கப்பாதை வரையிலான அபுதாபியின் முக்கிய சாலையான E11 சாலை
2025-ல் 6,014 போக்குவரத்து விபத்துகள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, நாட்டில் போக்குவரத்து விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது திடீரென வாகனங்களை திருப்புவதே காரணம் ஆகும். கடந்த ஆண்டு நாட்டின் சாலைகளில் நடந்த விபத்துகளில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்கு இதனாலேயே நிகழ்ந்துள்ளதாக தரவுகள் கூறுகிறது.
2025-ஆம் ஆண்டில் அமீரகங்கள் முழுவதும் மொத்தம் 6,014 சாலை விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த விரிவான புள்ளிவிவரங்கள், விபத்துக்களின் எண்ணிக்கைக்குக் காரணமான செயல்களையும், தவறுகளையும் தெளிவாகக் காட்டுகின்றன. மேலும் சாலைப் பாதுகாப்பு குறித்த அதிக விழிப்புணர்வின் அவசரத் தேவையையும் எடுத்துக்காட்டுகின்றன.
பெரும்பாலும் வெளியேறும் (Exit) வழிகளைத் தவறவிடுதல், பொறுமையின்மை அல்லது கவனக்குறைவு ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் திடீர் திசைமாற்றங்கள், 2025-ஆம் ஆண்டில் 905 விபத்துக்களுக்குக் காரணமாக அமைந்தன என்றும், இதுவே நாடு தழுவிய விபத்துக்களுக்கான மிகப்பெரிய ஒற்றைக் காரணம் என்றும் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel