2025-ஆம் ஆண்டில் நாடு முழுவதும், சாலைகளின் நடுவில் வாகனங்களை திடீரென நிறுத்தியதால் 24 சாலை விபத்துக்கள் ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக மிதமானது முதல் கடுமையானது வரையிலான காயங்களும், சொத்து சேதங்களும் ஏற்பட்டதாகவும் அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட தகவலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்ட வாகனங்களை ஓட்டுநர்கள் போக்குவரத்துப் பாதைகளிலிருந்து அப்புறப்படுத்தத் தவறியதால் 18 கடுமையான விபத்துக்கள் நிகழ்ந்ததாகவும், மேலும் போக்குவரத்து ஓட்டத்தை சீர்குலைத்து வாகனங்கள் மோதிக்கொள்ள வழிவகுத்த திடீர் நிறுத்தங்களால் ஆறு விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் சாலையின் நடுவில் நிறுத்துவது மிகவும் ஆபத்தான போக்குவரத்து விதிமீறல்களில் ஒன்றாகும் என்றும், குறிப்பாக அதிவேகச் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு எதிர்வினையாற்றக் குறைந்த நேரமே இருப்பதால், இது கடுமையான விபத்துக்கள், உயிரிழப்புகள் மற்றும் தீவிர காயங்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் எச்சரித்துள்ளது.
எனவே இயந்திரக் கோளாறுகளை எதிர்கொள்ளும் ஓட்டுநர்கள், முடிந்தவரை தங்கள் வாகனங்களை சாலையின் ஓரமாகவோ அல்லது போக்குவரத்திலிருந்து விலகி மற்றொரு பாதுகாப்பான இடத்திற்கோ செலுத்துமாறும், அபாய எச்சரிக்கை விளக்குகளை இயக்குமாறும், மற்றும் வரும் வாகன ஓட்டிகளை எச்சரிக்க பிரதிபலிக்கும் எச்சரிக்கை முக்கோணத்தை வைக்குமாறும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், பழுதடைந்த வாகனத்தை நகர்த்த முடியாவிட்டால் உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு வாகன ஓட்டிகளை அது கேட்டுகொண்டுள்ளது. இதன்மூலம், அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பாதுகாக்கவும், போக்குவரத்தைப் பாதுகாப்பாக நிர்வகிக்கவும் முடியும். வழியில் சிக்கியுள்ள வாகனங்களைப் பாதுகாக்கவும், போக்குவரத்து ஓட்டத்தை ஒழுங்குபடுத்தவும் காவல்துறை ரோந்துப் பணிகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இது, எதிர்பாராத தடைகள், குறைந்த பார்வைத் திறன் அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவு ஆகியவற்றால் ஏற்படும் இரண்டாம் நிலை விபத்துகளின் அபாயத்தைக் குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.