ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி, கடந்த சில தினங்களுக்கு முன்பாக வாகனங்களில் ஓட்டுநர் உட்பட 3 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று விதிமுறைகள் போடப்பட்டிருந்தது. தற்பொழுது அந்த விதிமுறை தளர்த்தப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் மூன்று பேருக்கு மேல் ஒரே வாகனத்தில் பயணிக்க முடியும் என்று துபாய் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.
துபாய் காவல்துறையில் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் கூறுகையில், “ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது முதல் தர உறவினர்களை உள்ளடக்கிய வாகனங்கள் இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு இந்த விதிமீறலுக்கான தண்டனையாக 1000 திர்ஹம் அபராதத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூன்று நபர்களுக்கும் மேலாக இருந்தாலும் ஒரே வாகனத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளார். .
குடும்ப உறவை மேம்படுத்துவதற்கும், குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுவிடாமல் இருப்பதற்கும், ஒரு குடும்பமாக செல்லும் வாகனங்களை கையாள்வது மற்ற வாகனங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும் என்றும் அல் மஸ்ரூய் விளக்கினார்.
இதே அறிவிப்பை அபுதாபி காவல்துறையும், ஷார்ஜா காவல்துறையும் வெளியிட்டுள்ளது. முன்னதாக ஷார்ஜா காவல்துறைத் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் சிரி அல் ஷம்ஸி, இந்த முடிவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எல்லா இடங்களிலும் பொருந்தும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.