ஷார்ஜா : சினிமா, பூங்கா, தனியார் கடற்கரைகள் மக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஷார்ஜாவில் கொரோனாவினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது வரும் ஜூன் 24 ம் தேதி முதல் ஷார்ஜாவில் உள்ள பல்வேறு துறைகள் 50 சதவீத எண்ணிக்கையின் அடிப்படையில் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சினிமாக்கள், தனியார் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் மற்றும் பூங்காக்கள் ஆகியவை வரும் ஜூன் 24 ம் தேதி (புதன்கிழமை) முதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜாவின் மகுட இளவரசர் மற்றும் ஷார்ஜாவின் துணை ஆட்சியாளர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது பின் சுல்தான் அல் காசிமி அவர்களின் உத்தரவுக்கிணங்க பொருளாதார மற்றும் சுற்றுலாத் துறை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வாரத்தில் அலுவலகங்களில் 30 சதவீத எண்ணிக்கையின் அடிப்படையில் ஊழியர்கள் பணிபுரிவதற்கு அனுமதி வழங்கப்பட்டு அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டதும் ஷார்ஜாவில் இருக்கும் மூன்று பொது நூலகங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.