சுற்றுலாத்துறையில் தொடர்ந்து ஏற்றம் கண்டுவரும் ஓமான்.. 1.9 பில்லியன் ரியால் வருவாயை பதிவு செய்து சாதனை..!!
ஓமானின் சுற்றுலா துறையானது வளர்ச்சி கண்டுள்ளதாக தற்பொழுது வெளியாகிய புள்ளி விவரங்கள் விளக்குகின்றன. அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 1.3 பில்லியன் ரியால் வருவாயைப் பதிவு செய்த சுற்றுலாத்துறையானது 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 47.3% அதிகரித்து 1.9 பில்லியன் ரியாலைப் பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புள்ளியியல் மற்றும் தகவல்களுக்கான தேசிய மையம் (NCSI) வெளியிட்ட தரவுகளின் படி, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 1.1 பில்லியன் ரியால் வருமானம் சுற்றுலா துறையின் மூலம் நேரடியாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021 ஆம் ஆண்டு பெறப்பட்ட தொகையை காட்டிலும் 33 சதவீதம் அதிகம் என தரவுகள் கூறுகின்றன.
மேலும் சுற்றுலா துறையானது ஓமானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4% பங்களிப்பை அளித்துள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டில் 652,000 என்ற எண்ணிக்கையில் இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையானது 348 சதவிகிதம் அதிகரித்து 2022 ஆம் ஆண்டில் 2.9 மில்லியன் ஆக பதிவாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கையை கணக்கில் கொள்ளும் பொழுது வளைகுடா நாடுகளில் இருந்து அதிகப்படியான சுற்றுலாவாசிகள் ஓமானிற்கு வருகை புரிந்துள்ளனர். GCC நாடுகளில் இருந்து சுமார் 1.6 மில்லியன் பயணிகள் வருகை புரிந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதைத்தொடர்ந்து ஆசிய நாடுகளில் இருந்து 651,000 சுற்றுலாவாசிகள் வருகை புரிந்துள்ளதாகவும், ஐரோப்பாவில் இருந்து 360,000 சுற்றுலாவாசிகள் வருகை புரிந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
சுற்றுலாவிற்காக வருகை தந்த காரணங்களை கணக்கில் கொள்ளும் பொழுது ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக வந்தவர்கள் 43.5 % எனவும், குடும்பம் மற்றும் நண்பர்களை பார்வையிட வந்தவர்கள் 35.7 % எனவும் மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் வணிக நோக்கங்களுக்காக வருகை புரிந்தவர்கள் 10.5% எனவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அதே நேரத்தில் ஓமானில் இருந்து வெளியே சென்று சுற்றுலாவினை கழித்த பயணிகளின் புள்ளி விவரங்களும் கிடைத்துள்ளன. அதன்படி வெளிநாடு சென்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 1.9 மில்லியன் என்று இருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு 5.2 மில்லியன் என பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.