ADVERTISEMENT

அமீரகம் வருபவர்களின் கவனத்திற்கு..!! இந்தியாவிலிருந்து அமீரகம் வந்தடைந்த பயணிகள் தெரிவித்த தகவல்கள் உங்களுக்காக..!!

Published: 13 Jul 2020, 4:03 AM |
Updated: 16 Jul 2020, 8:54 AM |
Posted By: admin

இந்தியாவில் சிக்கித்தவித்த ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களில் செல்லுபடியாகும் ரெசிடன்சி விசா மற்றும் ICA அல்லது GDRFA அனுமதி வைத்திருப்பவர்கள் அமீரகம் திரும்பலாம் என இந்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அமீரகத்திற்கு இயக்கப்படும் வந்தே பாரத் விமானங்கள் மூலம் அமீரக குடியிருப்பாளர்கள் நாடு திரும்பி வருகின்றனர். இந்தியா மற்றும் அமீரகம் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதும், மேலும் அமீரகத்திற்கு சொந்தமான விமான நிறுவனங்கள் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தை தொடர்ந்து நேற்று முதல் இந்தியர்கள் பலரும் அமீரகம் வர தொடங்கியுள்ளனர். இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு வந்த அப்பயணிகள் கூறியுள்ளதன்படி, இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு பயணிக்க இருக்கும் நபர்கள் 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட்டை வைத்திருப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜா விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட்டை வைத்திருக்க வேண்டும் என்று ஏர் அரேபியா விமான நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நேரக்கணக்கெடுப்பானது கொரோனாவிற்கான பரிசோதனையின் மாதிரியை கொடுத்த நேரத்திலிருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதாக கூறியுள்ளனர். மேலும், சோதனையின் முடிவுகள் ICMR அங்கீகாரம் பெற்ற சோதனை மையங்களில் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அங்கீகாரம் பெறாத சோதனை மையங்களின் மூலம் பெறப்பட்ட சான்றிதழ்களை வைத்திருந்த சில பயணிகளை விமானத்தில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் இருக்கக்கூடிய ICMR அங்கீகாரம் பெற்ற சோதனை மையங்களின் விரிவான பட்டியலை ஆரோக்கிய சேது அப்ளிகேஷனில் (Arokya Sethu Mobile App) தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் அமீரகத்தில் தரையிறங்கியவுடன் இம்மிகிரேஷனிற்கு முன்பாக, விமான நிலைய அதிகாரிகள் நாம் கொண்டு வரும் அறிவிப்பு படிவத்தை (Declaration Form) ஐ சேகரித்து பயணிகளுக்கு கொரோனாவிற்கான டெஸ்டிங் கிட்டை வழங்குவார்கள் என்று கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த குறித்து ஒரு பயணி கூறுகையில், “இம்மிகிரேஷன் செயல்முறை சாதாரணமானது. நாங்கள் விமான நிலையத்தின் ஸ்மார்ட் வாயில்கள் வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. இம்மிகிரேஷன் முடிந்த பிறகு, பயணிகள் நேராக கோவிட் -19 சோதனை பகுதிக்குச் சென்று தங்களுடைய டெஸ்டிங் கிட்டை கொடுக்க வேண்டும். அங்கிருக்கும் சுகாதார ஊழியர்கள் பயணிகளுக்கு கொரோனாவிற்கான பரிசோதனை(nasal swap test) மேற்கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.

அதன் பின்னர், விமான நிலைய ஊழியர்கள் covid 19 DXB மொபைல் அப்ளிகேஷனின் பயன்பாடு மற்றும் அதன் மூலம் கொரோனா பரிசோதனை முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது உள்ளிட்ட விளக்கங்களை அளிப்பார்கள் என்றும் அமீரகம் வந்தடைந்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்பொழுது துபாய் விமான நிலையத்தில் டூட்டி பிரீ (duty free) கடைகள் மட்டுமே திறந்திருப்பதாகவும் விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் பொது எப்பொழுதும் போல டாக்சிகள் பயணிகளுக்காக காத்திருந்ததாகவும் அப்பயணிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வந்த பயணிகளின் அனுபவத்தின் அடிப்படையில், இனி வரும் நாட்களில் அமீரகத்திற்கு வரவிருக்கும் பயணிகள் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை கீழே காண்போம்…

> ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் PCR சோதனையை மேற்கொள்வது நல்லது.

> PCR சோதனை செல்லுபடியாகும் 96 மணி நேரங்களை PCR சோதனைக்கான மாதிரியை கொடுத்த நேரத்திலிருந்து கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.

> ஷார்ஜா மற்றும் துபாய் வரவிருக்கும் பயணிகள் GDRFA ஒப்புதல்களின் நகல் வைத்திருக்க வேண்டும். (துபாய் ரெசிடன்சி விசா வைத்திருப்பவர்கள் GDRFA ஒப்புதல் பெறுவது கட்டாயம்)

> அபுதாபிக்கு வரவிருக்கும் பயணிகள் ICA ஒப்புதல்களின் நகல் வைத்திருக்க வேண்டும். (GDRFA ஒப்புதல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)

> ICA ஒப்புதல் இருக்கும் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் வழியாகவும் நுழையலாம்.

> விமான நிலையத்திற்கு விரைவில் வந்து சேர வேண்டும்.

> PPE suit, முகக் கவசங்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பயணிகளுக்கு வழங்கப்பட்டாலும், சொந்தமாக எடுத்துச் செல்வது சிறந்தது.

> ஹாண்ட் சானிடைசர் வைத்திருத்தல் நல்லது.

> குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள், அவர்களும் முக கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

> சுகாதார அறிவிப்பு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட படிவங்கள் துபாய் விமான நிலையத்தில் வந்து பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

> பயணிகளின் சோதனை முடிவுகள் வெளியாகும் வரை வீட்டு தனிமைப்படுத்தல் பரிந்துரைக்கப்படுகிறது.

> இந்தியாவில் லாக்டவுன் அறிவித்திருந்தாலும் விமான நிலையத்திற்கு பயணிக்கலாம். இருப்பினும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பயணிக்க வேண்டும் என்றால், https://serviceonline.gov.in/epass/ இல் ஆன்லைன் இ-பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.