ஷார்ஜாவில் இருக்கக்கூடிய அல் தைத் நகரில் இன்று (வியாழக்கிழமை) ஷரியா சந்தையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல கடைகள் தீக்கிரையாகியுள்ளன. ஷார்ஜா சிவில் பாதுகாப்பு குழுவின் படி, இன்று அதிகாலையில் அல் தைத் நகரில் உள்ள ஷரியா சந்தையில் தீப்பிடித்ததில் பல கடைகள் எரிந்து நாசமாகியதுடன் இந்த தீ விபத்தால் சந்தையில் பெரும் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடை உரிமையாளர்களுக்கு பெரும் நிவாரணமாக, பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உடனடியாக மாற்று கடைகளை வழங்குமாறு ஷார்ஜா ஆட்சியாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஷார்ஜாவின் ஆட்சியாளரும் சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினருமான மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி, ஃபர்னிச்சர் ஏர் கண்டிஷனிங் போன்ற முழுமையான செயல்பாட்டுடன் கடைகள் மூன்று நாட்களுக்குள் தயாராக இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஷேக் டாக்டர் சுல்தான் ஒரு நிரந்தர சந்தையை நிறைவு செய்யும் திட்டத்தையும் தொடங்கினார். பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு புதிய சந்தையில் புதிய கடைகள் மூலம் நஷ்டஈடு வழங்குவதுடன், அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கான நிதி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ஷார்ஜா சிவில் பாதுகாப்பு ஆணையத்தின் டைரக்டர் ஜெனரல் கர்னல் சாமி அல் நக்பியின் கூற்றுப்படி, ஷரியா சந்தையில் அதிகாலை 3:14 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து குறித்து செயல்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டதுடன், சிவில் பாதுகாப்பு குழுக்கள் உடனடியாக பதிலளித்தன என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து, அருகில் உள்ள கியோஸ்க்களுக்கு பரவாமல் தடுத்தனர் என கூறப்பட்டுள்ளது. தீ அணைக்கப்பட்ட பின்னர், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணைக்காக அந்த இடம் தடயவியல் ஆய்வகத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel